கருணாநிதி குடும்ப வருமானம் ரூ. 5 லட்சம் கோடி-ஜெ. தகவல்
புதுக்கோட்ட: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாயை நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய கருணாநிதி அதன் மூலம் ரூ 5 லட்சம் கோடிக்கு மேல் தன் குடும்ப வருமானத்தைப் பெருக்கி கொண்டார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாயை நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய கருணாநிதி அதன் மூலம் ரூ 5 லட்சம் கோடிக்கு மேல் தன் குடும்ப வருமானத்தைப் பெருக்கி கொண்டார்.
பெரம்பலூரில் உள்ள ஏழை - எளிய மக்களிடமிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலத்தை, ஏக்கருக்கு ரூ 60 ஆயிரம் வீதம் வழங்கி ரூ 18 லட்சத்திற்கு விற்றுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா. இதன் மூலம் 174 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது கருணாநிதி தரப்பு.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எல்லாம் தனது ஊழலை மூடி மறைக்க அப்பாவி அதிகாரிகளின் உயிரைக் காவு வாங்குவது வழக்கம். இந்த முறை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷாவை பலிவாங்கி விட்டார்.
இப் பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி கருணாநிதி ஆட்சியில் உருவாக்கப்பட்ட கால்ஸ் என்ற சாராயத் தொழிற் சாலையை இழுத்து மூட உத்தரவிடுவேன்.
கொள்ளிடம் உபரி நீர்த் திட்டத்தை அக்கினி ஆறு மூலம் கொண்டு வந்து இப் பகுதியின் விவசாய வளத்தைப் பெருக்குவேன்.
கந்தர்வக் கோட்டையில் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை உருவாக்குவேன். அரசு சார்பில் முந்திரித் தொழிற்சாலையை உருவாக்குவேன் என்றார் ஜெயலலிதா.
திருவாரூரில் இன்று ஜெ. பிரசாரம்
இதற்கிடையே, இன்று முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். கருணாநிதியை எதிர்த்து அதிமுக சார்பில் குடவாசல் ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து இன்று ஜெயலலிதா பிரசாரம் செய்யவுள்ளதால் திருவாரூர் தொகுதியில் பிரசாரம் களை கட்டியுள்ளது.
ஏற்கனவே முதல்வருக்காக இங்குமுகாமிட்டு அவரது மகள் செல்வி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications