தாசில்தார் மீது தாக்குதல்: அழகிரி மீது வழக்குப் பதிவு
மதுரை: மதுரை அருகே உள்ள மேலூரில் தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நிகழ்ச்சியில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என விசாரிக்கச் சென்ற தேர்தல் அதிகாரி காளிமுத்துவை திமுகவினர் தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி கோயிலுக்கு நேற்று மு.க. அழகிரி சென்றார். கோயிலுக்குள் கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது. இதனால், யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்த மேலூர் தேர்தல் அதிகாரி காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் மு.க. அழகிரியுடன் இருந்த சிலர் தாசில்தார் காளிமுத்துவை அடித்து உதைத்தனர். இது குறித்து தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 , 341, 332, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிவு செய்தார்.
தாசில்தார் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.
மக்கள் பதிலடி கொடுப்பார்கள்-ஸ்டாலின்:
திமுகவுக்கு எதிரான தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மதுரையில் அவர் அளித்த பேட்டி,
கேள்வி: தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறேன். திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கலைஞர் 6வது முறையாக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பார்.
கேள்வி: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டில் இருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதே?
பதில்: தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி தேர்தல் ஆணையம் மூலம் நடக்கிறது.
கேள்வி: ஆளுங்கட்சிக்கு எதிராக தேர்தல் ஆணையம் கெடுபிடி செய்வது குறித்து?
பதில்: தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளுக்கு, தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.
கேள்வி: ஜெயலலிதா பிரசாரத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை முன் வைத்து பேசுவது இல்லையே ஏன்?
பதில்: திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து தான், அதிமுக தேர்தல் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதனை முன் நிறுத்தி ஜெயலலிதா பேசுவதில்லை.
மு.க.முத்து மருத்துவமனையில் அனுமதி:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மு.க.முத்துவிற்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் குணமடைந்தார். இந் நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications