ரூ. 5.11 கோடி என்னுடையதுதான், இன்னும் ரூ. 20 கோடி இருக்கு-ஆனா கணக்கு கிடையாது: டிராவல்ஸ் அதிபர்
திருச்சி: ஆம்னி பஸ்ஸில் பிடிபட்ட ரூ. .5.11 கோடி மட்டுமல்ல, இன்னும் என்னிடம் ரூ. 20 கோடி பணம் உள்ளது. ஆனால் எதற்குமே கணக்கு கிடையாது என்று திருச்சி டிராவல்ஸ் அதிபர் அதிரடியாக கூறியுள்ளார்.
திருச்சியில் நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ் ஒன்றின் மேற்கூரையில் 5 பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் பணத்தை திருச்சி மேற்கு சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரி டாக்டர் சங்கீதா அதிரடியாக பறிமுதல் செய்தார்.
இந்தப் பணம் அமைச்சர் கே.என். நேரு அனுப்பிய பணம் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதை நேரு மறுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்தப் பணத்தை பலத்த பாதுகாப்புடன், தேர்தல் அதிகாரிகள், ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். இந்தப் பணப் பறிமுதல் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் சோதனைகளில் ஒரே நேரத்தில் பிடிபட்ட மிகப் பெரிய தொகை இது என்பதாலும், அமைச்சர் நேருவின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சிக்கியுள்ளதாலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் உதயக்குமரன், அவரது மகன் அருண் பாலாஜி, நிறுவன மேலாளர் பாலு ஆகியோரிடம் வருமான வரித்துறையினரும்,தேர்தல் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
அப்போது பணம் குறித்து துருவித் துருவி விசாரிக்கப்பட்டது. அதற்கு உதயக்குமரன் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
அந்த பணம் என்னோடதுதான். அதேபோல என்கிட்ட இன்னும் 20 கோடி இருக்கு. ஆனா எல்லா பணத்துக்கும் என்கிட்ட கணக்கு கிடையாது. நான் 8வது வரைக்கும்தான் படிச்சிருக்கிறேன். அதனால் கணக்கு வச்சிக்கிறது கிடையாது.
இதுவரை இன்கம்டாக்ஸ் கட்டாம இருந்தேன். எல்லோரும் சொன்னாங்க. நீ ஒரு நாள் மாட்டப்போறேன்னு. அது போல இப்ப நான் நல்லா வசமா மாட்டிக்கிட்டேன்.
ரியல் எஸ்டேட்டுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கத்தான் இந்த 5 கோடியை எடுத்துக்கிட்டு மெட்ராஸ் போனேன். தேர்ல் நேரமா இருக்குறதுனாலதான் என்னோட பஸ்சுலேயே டாப்ல கட்டிப்போட்டு எடுத்துக்கிட்டு போனேன் என்று பலே பதிலை அளித்துள்ளார் உதயக்குமரன்.
இதற்கிடையே, சம்பவத்தன்று அதிகாரி சங்கீதா ரெய்டுக்குப் போனபோது பஸ் இருந்த பகுதியிலிருந்து காரில் நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications