'தேர்தலில் எனக்கு டெபாஸிட் கூட கிடைக்காது'- அன்னா ஹஸாரே

'ம்ஹூம்... டெபாஸிட் கூட கிடைக்காது' என்கிறார் ஹஸாரே.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அன்னா ஹஸாரே. அப்போது அரசியலில் ஈடுபட விருப்பமா என்று கேட்டனர்.
இதற்கு பதிலளிக்கையில், "எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பிரதமராகும் விருப்பமும் இல்லை.
நான் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் தொகை கூட கிடைக்காது. ஏனென்றால் எனக்கு பணபலம் இல்லை. வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை 100 ரூபாய் பணத்துக்காகவும், மது பாட்டிலுக்காகவும் விற்கும் நிலை உள்ளது. இன்றைக்கு ஒருவர் தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் ரூ 6 முதல் 7 கோடி வரை தேவை," என்றார்.
நேர்மையான எம்.பி.க்கள் உங்களை பிரதமராக தேர்ந்து எடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டபோது, "நான் அரசியலில் நுழைந்து பிரதமராகும் நிலை ஏற்பட்டால், நான் தற்போது செய்து கொண்டு இருப்பதை, அரசின் அங்கம் என்ற முறையில் செய்ய முடியாது. அரசியலில் இறங்குவது குறித்து ஒருபோதும் நான் நினைத்தது இல்லை," என்று அவர் பதில் அளித்தார்.
மகாத்மா காந்தி அல்லது ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டதற்கு, "மகாத்மா செய்தது மிகப் பெரிய சாதனை. நான் அவரைப் பின்பற்ற முயல்கிறேன். அவரோடு யாரையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. மகாத்மா பெரும் அறிவாளி, மெத்தப் படித்தவர். நான் பெரிதாக படிக்கவுமில்லை. தேசத்தின் தந்தையான அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம்", என்றார்.












Click it and Unblock the Notifications