கரூரில் வசித்து வந்த ஜான் டேவிட் குடும்பமும் தலைமறைவு!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்த, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசுவை, ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்த சக மாணவர் ஜான் டேவிட்டை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது தீர்ப்பளித்து.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான்டேவிட் அப்பீல் செய்த போது, அதை விசாரித்த நீதிபதிகள் கொலை குற்றம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர்.
ஜான் டேவிட்டின் இந்த விடுதலையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முகுந்தம் ஷர்மா, அனில் தபே ஆகியோர்,
மாணவர் நாவரசு கொலை வழக்கில் கடலூர் சென்ஸ் நீதி மன்றம் ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை செல்லும். வழக்கை சரியாக விசாரிக்காமல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜான் டேவிட்டுக்கு இட்டை ஆயுளை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்க முடியாது. எனவே, ஜான் டேவிட் உடனடியாக கடலூர் சிறை அதிகாரி முன் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ஜான் டேவிட்டை கண்டுபிடிக்க கடலூர் மாவட்ட எஸ்.பி. தனிப்படை அமைத்தார். ஆனால், அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் போலீஸ் படை கரூர் வெங்கமேட்டில் உள்ள ஜான் டேவிட் வீட்டுக்கு வந்தது. ஆனால், ஜான் டேவிட்டின் தந்தை மாரிமுத்து, தாயார் எஸ்தர் ஆகியோர் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டனர். இவர்களைப் பிடித்து விசாரித்தால் தான் டேவிட்டின் இருப்பிடம் சரியாகத் தெரியவரும் என்பதால் அவர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், மாணவர் நாவரசு கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒரு படை ஜான்டேவிட்டின் சொந்த வீடு உள்ள கரூர் வெங்கமேடு சென்று சோதனை செய்தோம். ஆனால் இங்கு யாரும் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடக்கிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள். இதனால் டேவிட் மாரிமுத்து இங்கு எப்போது வந்தார், வாடகை பணம் எவ்வாறு பெற்று உள்ளார் என்பது குறித்து இங்கு உள்ள அலுவலர்களிடம் விசாரித்து உள்ளோம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த வீட்டில் டேவிட் மாரிமுத்து இருந்து உள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் தலைமறைவாகி உள்ளார். தாய் எஸ்தர் தற்சமயம் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் கரூரில் உள்ள ஜான் டேவிட்டின் உறவினர்களிடமும் விசாரித்து வருகிறோம்.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் ஜான் டேவிட் பெயரில் பாஸ்போர்ட்டு ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஒருவேளை வேறு பெயரில் பாஸ்போர்ட் எடுத்து அவர் வெளிநாட்டுக்குத் தப்பினார என்றும் விசாரிக்கிறோம். ஜான் டேவிட் தமிழகத்தில் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications