போர்க்குற்றம் குறித்த ஐ.நா. அறிக்கை-இலங்கைக்கு சீனா ஆதரவு
பெய்ஜிங்: இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தைப் புரிந்துள்ளது என்று ஐ.நா. நிபுணர் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் இலங்கைக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது சீனா.
போர்க்குற்றம் புரிந்துள்ளது இலங்கை ராணுவம், அப்பாவித் தமிழர்களையும், தமிழ்ப் பெண்களையும் கொடூரமாக கொலை செய்தும், கற்பழித்தும் கொடுமைப்படுத்தியது இலங்கை ராணுவம், மிகவும் அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி தமிழர்களை கூட்டம் கூட்டமாக அழித்தனர் என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கு சீனா தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், இந்த விஷயத்தை உலக நாடுகள் யாரும் தலையிட்டு குழப்பமாக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். இதை இலங்கையே கையாளும்.
இதுதொடர்பாக இலங்கை அரசு ஏற்கனவே ஒரு குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது. தங்களது பிரச்சினைகளை இலங்கை அரசும், மக்களும் தாங்களாகவே தீர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை சீனாவுக்கு உள்ளது என்றார் ஹாங்.
சீனாவின் இந்த ஆதரவால் இலங்கைக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிபுணர் குழு அறிக்கை மற்றும் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பிரச்சினை வரும்போது சீனாவும், இந்தியாவும், இலங்கையைக் காப்பாற்றும் என்ற பெருத்த நம்பிக்கையில் அந்த நாடு உள்ளது. இந்த நிலையில் சீனாவின் ஆதரவு பகிரங்கமாக வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications