டெல்லியில் கனிமொழி: நாளை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்-கைதை தவிர்க்க திமுக தீவிரம்!

அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் டெல்லி சென்றுள்ளார். அவரது தாயார் ராசாத்தி அம்மாளும் டெல்லி சென்றுள்ளார்.
நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து முதல்வர் கருணாநிதி சட்ட நிபுணர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் கனிமொழி நேற்று காலை தனது கணவர் அரவிந்தன் மற்றும் மகன் ஆதித்யாவுடன் விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன், எம்.பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரும் சென்றனர்.
கனிமொழியின் தாயாரான ராசாத்தி அம்மாளும் மாநில தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதையுடன் நேற்றிரவு டெல்லி சென்றார்.
முன்னதாக மத்திய அமைச்சர் அழகிரி உள்ளிட்ட அனைத்து திமுக எம்பிக்களும் டெல்லி சென்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் நாளை கனிமொழி கைதாகலாம் என்ற கவலையும் திமுக தரப்பிடம் உள்ளது. கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க திமுக தலைமை போராடி வருகிறது.
பிரபல சட்ட நிபுணர்களான ராம் ஜேத்மலானி, முகுல் ரோத்தகி ஆகியோருடனும் திமுக தரப்பில் நடத்தியுள்ளனர். மேலும் தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் பிரபல சட்ட நிபுணர் பராசரனின் ஆலோசனையையும் திமுக பெற்றதாகத் தெரிகிறது.
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்ப்பரேட் நிறுவன உயர் அதிகாரிகள் பலரும் ஜாமீன் கேட்டும், யாருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஜாமீன் வழங்கவில்லை என்பதால் கனிமொழி விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, டிபி ரியால்டி நிர்வாக இயக்குநர் வினோத் கோயங்கா, அனில் திருபாய் அம்பானி குழும அதிகாரிகள் கெளதம் தோஷி, பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகிய 5 அதிகாரிகளும் ஏப்ரல் 20ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் ஐந்து பேரும் சிபிஐ கோர்ட்டில் ஜாமீன் கோரியபோது இவர்களை வெளியில் விட்டால் ஆதாரங்களை, சாட்சியங்களை அழிக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்து நீதிபதி சைனி ஜாமீன் மறுத்து விட்டார். இதையடுத்து இவர்கள் தற்போது உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிக்கலான சூழ்நிலையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரன்-பேத்திகளான நலன், நிலாவின் பிறந்தநாள் நாளை வருகிறது. இந்தக் கொண்டாட்டத்தை மிக மிக எளிமையாக நடத்த ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.
இந் நிலையில் டெல்லியில் அமைச்சர் அழகிரியின் இல்லத்தில் திமுக எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications