கொடநாடு ஓய்வை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் ஜெ.

சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற்றது. இதில் தீவிரப் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. தேர்தலுக்குப் பின்னர் 19ம் தேதி அவர் கொடநாடு சென்றார். அங்கு ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா நேற்று சென்னை திரும்பினார்.
தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து அவர் சென்னை திரும்பியுள்ளதாக தெரிகிறது. நேற்று பிற்பகலில் சென்னை வந்த ஜெயலலிதாவுக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தடபுடலாக வரவேற்கப்பட்ட ஜெயலலிதாவை செய்தியாளர்கள் அணுகி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்து கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த தெயலலிதா, இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. மே 14ம் தேதிக்கு கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை கோர்ட் தள்ளி வைத்துள்ளது எனவே நானும் அதுவரை எனது பதிலை தள்ளி வைக்கிறேன்.
கனிமொழியைக் காப்பாற்றுவதற்காக ராசாவை திமுக கை கழுவுவதாக கூறப்படுவது குறித்து நான் இப்போது பதிலளிக்க இயலாது. கோர்ட்டில் வழக்கு உள்ளதால் அதுகுறித்துக் கூற விரும்பவில்லை என்றார்.
தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு மே 13ம் தேதி அனைவருக்கும் அது தெரிய வரும் என்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் செய்துள்ள விரிவான ஏற்பாடுகள் தனக்கு திருப்தியும், மகிழ்ச்சியும் தருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
அமைச்சர்கள் பட்டியல் தயார்?
இதற்கிடையே, ஜெயலலிதா தனது அமைச்சர்கள் பட்டியலைத் தயாரித்து முடித்து விட்டதாக ஒரு செய்தி கூறுகிறது. அதில் கொளத்தூர் தொகுதியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் சைதை துரைசாமி, கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
அதேசமயம், பல புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்க ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications