15 மணி நேர கராச்சி தலிபான் முற்றுகை முடிந்தது-13 பேர் பலி

இந்த கடும் சண்டையில் 15 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் வரலாற்றில் இவ்வளவு பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவரை நடந்ததில்லை என்பதால் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் பரபரப்பாகிப் போனது.
தீவிரவாதிகளின் முற்றுகையில் சிக்கியுள்ள கடற்படைத் தளத்தில் தொடர்ந்து பல குண்டுகள் வெடித்தன.
பாகிஸ்தானின் அதிஉயர் பாதுகாப்பு கொண்ட தளம் எனப்படும் கராச்சியின் பிஎன்எஸ் மேஹ்ரான் கடற்படைத்தளத்தில் நேற்று இரவு 10.40 மணிக்கு தலிபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்கத் தொடங்கினர்.
அருகில் உள்ள விமானப்படைத் தள அருங்காட்சியகம் வழியாக தீவிரவாதிகள் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மொத்தம் 5 குண்டுகள் வெடித்ததாகவும் 20 நிமிடங்கள் வரை துப்பாக்கிச் சண்டை நடக்கும் சப்தம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்த குண்டுவெடிப்புக்கு தாங்களே காரணம் என பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் படலமாக இந்த சம்பவத்தை நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கராச்சி கடற்படை தளத்தில் இருந்த அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்கள் பி 3 சி ஓரியனை குறித்து ராக்கெட் குண்டுகளை வீசி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் தலிபான்கள். இதில் இரண்டு விமானங்கள் முற்றிலும் நாசமாகி விட்டது. இவை இரண்டும் அமெரிக்கத் தயாரிப்பு கண்காணிப்பு விமானங்களாகும்.
இதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருமாறு முப்படைகளையும் கேட்டுக் கொண்டார் பிரதமர் கிலானி.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரும், கமாண்டோப் படையினரும் கடும் பதில் சண்டையில் ஈடுபட்டு இன்று பிற்பகல் வாக்கில் தீவிரவாதிகளின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இந்த சண்டையின்போது பாகிஸ்தான் ராணுவத் தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தரப்பில் பலர் கொல்லப்பட்டனர். 7 பேர் உயிருடன் சிக்கினர். 5 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பிடிபட்ட தீவிரவாதிகளை ரகசிய இடத்திற்குக் கொண்டு போய் ராணுவத்தினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தாக்குதலில் கடற்படைத் தளம் பெரும் சேதத்தை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கடற்படைத் தளத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது. அமெரிக்காவும் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications