டீசல் விலை ரூ. 4 ஆக உயர வாய்ப்பு-லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் எச்சரிக்கை

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மூன்று பொருட்களின் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய மந்திரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த மறுநாளே கூடுவதாக இருந்தது. ஆனால், திடீரென அக்கூட்டம் ஜுன் 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஜூன் 9ம் தேதி கூடும் இக்கூட்டத்தில் டீசல், காஸ் விலை உயர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், காஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 20 முதல் 25 வரையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டீசல் விலை உயர்த்தப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே டீசல் விலை உயர்வை எதிர்த்து இந்தியா முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications