விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் குதிக்கும் சிபிஐ
திருவாரூர்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து அடுத்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில்,
மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வால் மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகிறார்கள். இதனை கண்டித்து வருகிற ஜுன் மாதம் முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். திறமையற்ற ஆட்சியாளர்களால் விலைவாசி நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
பணவீக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது என்று மத்திய அமைச்சர் கூறுவது, அரசை பயமுறுத்துகிறாரா? அல்லது மக்களை பயமுறுத்துகிறாரா? என்று தெரியவில்லை.
சட்டமன்றத்தேர்தலில், தமிழக மக்கள் கவனத்துடன் நல்லமுடிவு எடுத்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. அரசு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட வேண்டும்.
சமச்சீர்கல்வியை முற்றிலும் கைவிடக்கூடாது. எந்த திட்டத்திலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். பல அறிஞர்கள் ஆய்வு செய்து, அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் கொண்டு வந்த சமச்சீர் கல்வியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என உலகநாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்தியா இதுவரை வாய் திறக்கவில்லை என்றார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications