ஐஎஸ்ஐயை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் இந்தியா வழக்கு
டெல்லி: ஐஎஸ்ஐ அமைப்புக்கு, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வலியுறுத்தி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே மும்பை தீவிரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த ரபி கப்ரியல் மற்றும் அவரது மனைவி ரிபக்காவின் குடும்பத்தினர் ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிகக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.
தன்னை மனுதாரராக சேர்த்துக் கொண்டு, மும்பை பயங்கரவாத சம்பவத்தில் ஐஎஸ்ஐக்கு உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக சமர்ப்பிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.
மும்பையில் தாக்குதல் நடத்தியது லஷ்கர் இ தொய்பா அமைப்பும், ஐஎஸ்ஐயும்தான். லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு ஐஎஸ்ஐ எந்த வழிகளிலெல்லாம் உதவியது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் ஐஎஸ்ஐ அமைப்பை கோர்ட் தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தால், அதை உடனடியாக அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டு தீவிரவாத அமைப்புகளின் வரிசையில் சேர்க்க வேண்டும். அமெரிக்கா அவ்வாறு செய்தால் ஐரோப்பிய நாடுகளும் அதைப் பின்பற்றும். இதன் மூலம் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியும், அபாயமும் ஏற்படும். ஐஎஸ்ஐ அமைப்பையே கலைக்க வேண்டிய நிலைக்குப் பாகிஸ்தான் தள்ளப்பட நேரிடும்.
தற்போது சிகாகோ கோர்ட்டில் சாட்சியம் அளித்து வரும் பாகிஸ்தானிய அமெரிக்கரான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி, மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஐஎஸ்ஐதான் முக்கியப் பங்கு வகித்ததாக கூறி வருகிறான். ஐஎஸ்ஐ அதிகாரிகள் தனக்குப் பயிற்சி கொடுத்ததாகவும், உளவு பார்க்க ஊக்குவித்ததாகவும், இன்ன பிற உதவிகளையெல்லாம் செய்ததாகவும் அவன் கூறி வருகிறான்.
இவை அனைத்தும் ஐஎஸ்ஐக்கு எதிரான ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட முடியும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications