முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் உறவினர் விபீஷ்ணன் விபத்தில் பலி
பெரம்பலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் உறவினரும், பெரம்பலூர் மாவட்ட திமுக பிரதிநிதியுமான விபீஷ்ணன் விழுப்புரம் அருகே கார் விபத்தில் பலியானார்.
பெரம்பலூர் வடக்கு மருதவிரோடு பகுதியை சேர்ந்தவர் விபீஷ்ணன் (50). இவர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சந்திரா (40). இவர்களுடைய மகன் அருண், மகள் மதிவதனம் (23).
மகன் அருணின் திருமணம் வரும் 20 ம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணத்துக்காக சென்னையில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க விபீஷ்ணன் தனது குடும்பத்தினருடன் சென்றார்.
பின்னர், விபீஷ்ணன், அவரது மனைவி சந்திரா, மகள் மதிவதனம், உறவினர் மாலினி ஆகியோர் பெரம்பலூரில் உள்ள தனது வீட்டிற்கு காரில் திரும்பினர். காரை
டிரைவர் முகமது ஆசிப் ஓட்டினார்.கார் விழுப்புரத்தை அடுத்த பிடாகம் பகுதியில் வந்த போது நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் விபீஷ்ணன் மற்றும் கார் டிரைவர் முகமது ஆசிப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
இந்த விபத்தில், படுகாயமடைந்த சந்திரா, மதிவதனம், மாலினி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் ஓடோடிவந்து காப்பாற்றி விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மதிவதனம் பரிதாபமாக இறந்தார். சந்திரா, மாலினி ஆகியோருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications