தந்திரமாக பேசி என்னை தீவிரவாதத்திற்கு ஆதரவாக மாற்றியது ஹெட்லிதான்-ராணா

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் நேரடித் தொடர்புடையவர்கள் தஹவூர் ராணா மற்றும் ஹெட்லி ஆகியோர். இவர்களில் ஹெட்லி பாகிஸ்தானிய அமெரிக்கர், ராணா, பாகிஸ்தானி கனடியர். இருவரும் சிகாகோவில் வைத்து கைதாகினர். தற்போது ராணா தொடர்பான வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.
மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தற்போது அப்ரூவராக மாறியுள்ளான் ஹெட்லி. ராணாவுக்கு எதிராக அவன் சாட்சியம் அளித்துள்ளான். அந்த சாட்சியத்தின்போது மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட விதம், அதுதொடர்பான சதித் திட்ட விவரங்கள், தானும், ராணாவும் மேற்கொண்ட பணிகள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உள்ள தொடர்புகள், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தொடர்புகள் உள்ளிட்டவற்றை புட்டுப் புட்டு வைத்துள்ளான் ஹெட்லி.
இந்த நிலையில் ராணாவின் வழக்கறிஞர் பாட்ரிக் ப்ளீகன், ஹெட்லி கூறிய பல விஷயங்களை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கோர்ட்டில் ராணா தரப்பு வாதத்தை எடுத்து வைத்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
ராணாவின் பள்ளிக்காலத் தோழன்தான் ஹெட்லி. அவன்தான் ராணாவிடம் தந்திரமாக பேசி தீவிரவாதத்திற்கு ஆதரவாளராக மாற்றினான்.
உணமையில் ஹெட்லியின் சதித் திட்டங்கள், தீவிரவாத திட்டங்கள் குறித்து ராணாவுக்குத் தெரியாது. ஆனால் ஹெட்லிதான் தந்திரமாக பேசி தனது தீவிரவாத செயல்களுக்கு ராணாவை இட்டுச் சென்றான்.
2009ம் ஆண்டு ஹெட்லியுடன் ராணா பேசியபோது, தான் டென்மார்க்குக்கு தனது தொழில்முறை பார்ட்னர்களுடன் செல்லவுள்ளதாக கூறினார். அப்போது ஹெட்லியுடன், டென்மார்க்கில் நபிகள் நாயகத்தை கார்ட்டூன் வரைந்து கேலி செய்த கார்ட்டூனிஸ்ட்டைக் கொலை செய்யும் திட்டத்தை தீட்டிய சதியாளர்கள் உடன் இருந்தனர். ஆனால் அவர்கள் குறித்து ராணாவுக்கு எதுவும் தெரியாது.
ஹெட்லியின் சதித் திட்டம் குறித்து ராணாவுக்குத் தெரிந்திருந்தால், தான் டென்மார்க் போவது குறித்து ஹெட்லியிடம் அவர் கூறியிருக்க மாட்டார்.
தனக்கு ஆதரவாக மக்களை மாற்றி அவர்களது தனது இரக்கமற்ற செயல்களுக்குப் பயன்படுத்த ஒருபோதும் ஹெட்லி தயங்கியதில்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணத்தைக் கூற வேண்டும் என்றால், 25 ஆண்டுகளுக்கு முன்பு ராணாவுக்குத் தெரியாமலேயே அவரைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிக்கு போதைப் பொருளை கடத்தியவன்தான் ஹெட்லி என்று கூறியுள்ளார் ப்ளீகன்.
ராணா பாகிஸ்தான் ராணுவத்தில் டாக்டராகப் பணியாற்றியவன். சிகோகோவில் இமிகிரேஷன் அலுவலகத்தை நடத்தி வந்தவர். மேலும் ஹெட்லியுடன் சேர்ந்து தீவிரவாத செயல்களை மேற்கொள்வதற்காக மும்பையில் ஒரு பிரிவைத் தொடங்கினான். இந்த பிரிவை திறந்து வைத்ததே ஹெட்லிதான் என்பது அமெரிக்கத் தரப்பு குற்றச்சாட்டாகும்.
மும்பை பயங்கரவாத சம்பவ சதித் திட்டங்கள் குறித்த தனது அனைத்து செயல்களிலும் ராணாவுக்குப் பங்கு உண்டு, அவனுக்கு தான் செய்தது அனைத்தும் தெரியும் என்று ஹெட்லி தனது சாட்சியத்தின்போது கூறியுள்ளான்.
மேலும் மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே சதித் திட்டத்தின் முழு விவரங்களையும் ராணாவிடம் தான் தெரிவித்ததாகவும் ஹெட்லி கூறியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications