அங்கீகரிக்கப்படாத லே-அவுட் ஆப்படிக்கும் அன்னூர் பேரூராட்சி!
அன்னூர்: அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகளில் மனை வாங்கினால் எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்பட மாட்டாது என அன்னூர் பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கொடிகட்டிப் பறக்கும் விற்பனை
அன்னூர் பேரூராட்சியை சுற்றியுள்ள சொக்கம்பாளையம், குமாரபாளையம், குன்னத்தூராம்பாளையம், கோவை ரோடு மற்றும் தாசபாளையம் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஏராளமான அங்கீகாரம் இல்லாமல் "லே-அவுட்'கள் அமைக்கப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சென்னையிலிருந்து நடிகர், நடிகைகளை அழைத்து வந்து லோக்கல் டிவியில் ஏராளமான விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். நிலம் வாங்குபவர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசு என அறிவிக்கிறார்கள். மனையிடங்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.
ஆப்படிக்கும் அன்னூர் பேரூராட்சி
இந்நிலையில் அங்கீகாரமில்லாத "லே-அவுட்'களில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் (லே-அவுட்) பொதுமக்கள் மனையிடம் வாங்கினால் அவற்றுக்கு பேரூராட்சி மூலம் கட்டட அனுமதி, வரி விதிப்பு, குடிநீர் குழாய் இணைப்பு ஆகிய எதுவும் வழங்கப்பட மாட்டாது. மேற்படி "லே-அவுட்'களில் ரோடு, சாக்கடை வடிகால் மற்றும் தெரு விளக்கு வசதி செய்து தரப்பட மாட்டாது.
எனவே, பொதுமக்கள் அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவில் மட்டும் மனையிடம் வாங்க வேண்டும். மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது சட்டத்திற்கு புறம்பானது. இந்த விதிமீறல் கண்டறியப்பட்டால், மோட்டார் கைப்பற்றப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அன்னூர் பேரூராட்சி தலைவர் வசந்தாமணி, செயல் அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications