6 நாள் முன்னதாக நாளை 'நல்ல நேரத்தில்' மேட்டூர் அணை திறப்பு!
மேட்டூர்: வழக்கத்துக்கு மாறாக, ஜூன் 12ம் தேதிக்குப் பதிலாக, நாளையே மேட்டூர் அணை காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக திறந்துவிடப்படவுள்ளது.
திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.
பல ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் மாத கடைசியிலும், ஜூலை மாதத்தி்லும் அணை திறக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜூன் 6ம் தேதியே தண்ணீர் திறந்துவிடப்படும் என்று புதிதாக பதவிக்கு வந்த அதிமுக அரசு அறிவித்துள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 115.81 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,534 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாலும், தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாலும் அணை முன்னதாக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 17லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
நாளை காலை பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இதற்கான விழா ஏற்பாடு மிக எளிமையாக செய்யப்பட்டுள்ளது.
நல்ல நேரமான காலை 9 மணி முதல் 10.30 மணிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 90 நாள் குறுவை பயிருக்கு போதுமானதாக உள்ளது. இருப்பினும் இரண்டாம் கட்ட சாகுபடியான சம்பா பயிருக்கு தேவையான நீர் தென் மேற்கு பருவ மழையைப் பொறுத்தே பூர்த்தியாகும்.
இல்லாவிட்டால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே சம்பா சாகுபடி முழு அளவில் நடக்கும்.












Click it and Unblock the Notifications