தயாநிதி மாறன் தொடர்ந்து பதவியில் நீடிப்பதை ஏற்கவே முடியாது-பாஜக
சென்னை: ஊழல் புகார்கள் அடுக்கடுக்காக குவிந்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் பதவியில் தயாநிதி மாறன் தொடர்ந்து நீடிப்பதை ஏற்கவே முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் முரளீதர் ராவ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தொலைத் தொடர்பு ஊழலில் தயாநிதி மாறன் பெயர் அடிபடுகிறது. அவருக்கு எதிராக பல ஆதாரங்களை ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரன் சிபிஐயிடம் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து ஊழல் புகார்கள் வெளிவரும் நிலையில் அவர் தொடர்ந்து மத்திய அமைச்சராக பதவியில் நீடித்து வருவது ஏற்கத்தக்கதல்ல. அதை பொறுத்துக் கொள்ள முடியாது.
தயாநிதி மாறன் உடனடியாக பதவியிலிருந்து விலகவேண்டும். அல்லது பிரதமர் அவரை நீக்க வேண்டும்.
ஸ்விஸ் வங்கிகளில் பெருமளவில் பணத்தைக் குவித்து வைத்துள்ளவர்களின் விவரத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மெளனம் சாதித்து வருகிறது.
ராம்தேவ் கருப்புப் பணத்திற்கு எதிராக பல வருடமாக போராடி வருகிறார். அப்போதெல்லாம் அவரது போராட்டம் குறித்து காங்கிரஸுக்கு ஒரு கவலையும் இல்லை. ஆனால் இப்போது அவரது போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதைத் தொடர்ந்து அரசியல் சாயம் பூசி தப்பிக்கப் பார்க்கிறது. இது கண்டனத்துக்குரியது என்றார் ராவ்.












Click it and Unblock the Notifications