மரியம் பிச்சை கார் டிரைவருக்கு நீதிமன்றம் ஜாமீன்
பெரம்பலூர்: தமிழக அமைச்சர் மரியம்பிச்சை மரணத்திற்கு காரணமான கூறப்படும் லாரி மற்றும் கார் டிரைவர்களுக்கு பெரம்பலூர் நீதி மன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற மரியம் பிச்சை தமிழக அமைச்சரவையில் சுற்றுச்சுழல் அமைச்சராக பதவியேற்றார்.
திருச்சியில் நடந்த ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டுவிட்டு சென்னைக்கு கடந்த 23.5.11 அன்று செல்லும்போது பெரம்பலூர் அருகேயுள்ள திருவிளக்குறிச்சி பிரிவு சாலை அருகே சென்ற போது லாரி மீது மரியம்பிச்சையின் கார் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் பலியானார்.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறிய முதல்வர் ஜெயலலிதா இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி விசாரணையை துவக்கினர். இதில், அமைச்சர் காருடன் மோதிய லாரி ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஷேக் இமாம் சாகிப்புக்கு சொந்தமானது என்றும், விபத்தின்போது லாரியை ஓட்டிச் சென்றது ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவர் சையத் அகமது (27) என்பதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் சையத் அகமதுவையும், லாரி உரிமையாளர் ஷேக் இமாம் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
விபத்துக்குள்ளான லாரியின் டிரைவர் சையத் அகமது மற்றும் அமைச்சர் மரியம்பிச்சையின் கார் டிரைவர் ஆனந்தன் இருவரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான போலீசார் பெரும்பலூர் முதன்மை குற்றவியியல் நீதிபதி குப்புசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் இருவரையும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்களுக்கு முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சரின் கார் டிரைவர் ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் லாரி டிரைவர் சையத் அகமதுவுக்கு, திருச்சி சி.பி.சி.ஐ.டி போலீசார் அலுவலகத்தில் 23 ம் தேதி வரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார்.












Click it and Unblock the Notifications