14ல் பெரியார், வைகை, பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு அணைகள் திறப்பு: ஜெ உத்தரவு
சென்னை: வரும் 14-ம் தேதி பெரியார், வைகை, பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முதல்போக பாசனத்திற்காக பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறுந்துவிடுமாறு தேனி மாவட்ட விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் தேனி மாவட்த்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட விவசாய பெருமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று முதல்போக பாசனத்திற்காக வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பாபநாசம், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications