கனிமொழிக்கு ஜாமீன் தந்தால் ஆதாரங்களை அழிப்பார், சாட்சிகளை கலைப்பார்: சிபிஐ

முறைகேடாக 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி தரப்பட்டது தொடர்பாக கனிமொழியையும் அதன் நிர்வாகி சரத்குமாரையும் சிபிஐ கைது செய்தது. இந்தப் பணம் லஞ்சம் என்கிறது சிபிஐ. ஆனால், கடன் என்கிறது கலைஞர் டிவி.
இந் நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழியும் சரத்குமாரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதந்தர் குமார் ஆகியோர், கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட பணம் குறித்தும், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் குறித்தும் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் இன்று சிபிஐ ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
அதில் கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். மேலும் கலைஞர் டிவிக்கு தரப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தான், அது கடன் தொகை அல்ல. 2ஜி வழக்கில் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த இருவருக்கும் ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது. முன்னதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், பின்னர் டெல்லி உயர்நீதிமன்றமும் இந்த வழக்கில் பல்வேறு விவகாரங்களையும் கவனமாக பரிசீலித்து தான் இந்த இருவருக்கும் வழங்க மறுத்துவிட்டன. இதனால் உச்ச நீதிமன்றமும் ஜாமீன் தரக் கூடாது.
இவர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்துவிடுவர், ஆதாரங்களை அழித்துவிடுவர் என்று சிபிஐயின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications