பிரான்ஸில் 11வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு!

ஐரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடத்தும் இந்த மாநாடு செப்டம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடக்கிறது.
இது தொடர்பாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மாநாட்டு அமைப்பாளரும் செயலாளருமான துரை கணேசலிங்கம், செயலாளரும் மாநாட்டின் துணைத் தலைவருமாகிய இ.ராஜசூரியர், பிரான்ஸ் கிளைத் தலைவரும் மாநாட்டு தலைவருமாகிய விசு செல்வராசா, பிரான்ஸ் கிளை செயலரும் மாநாட்டின் செயலாளருமாகிய ம. இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினால் இந்தாண்டு செப்டம்பர் 24, 25 சனி, ஞாயிறு இரு தினங்களில் பிரான்ஸின் எவ்ரி (Evry) நகரில் நடைபெற உள்ளது.
இந்த இயக்கம் தென் ஆப்பிரிக்காவை தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது.
இந்த இயக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1977ல் சென்னையிலும், 1980ல் மொரீஸிசியசிலும் 1985ல் சேலத்திலும்,1989ல் மலேசியாவிலும்,1992ல் ஆஸ்திரேலியாவிலும், 1996ல் கனடாவிலும, 1999ல் சென்னையிலும், 2001ல் தென் ஆபிரிக்காவிலும், 2004ல் புதுவையிலும், 2007ல் மலேசியாவிலும் ஆக பத்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 11வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ளது.
உலகத் தமிழர் மொழி, பண்பாட்டு, வாழ்வியல் மேம்பாடு என்ற கருப்பொருளில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இதுவரை இந்த இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு, தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி. தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு. தூய தமிழ் வழக்கு, தமிழ் செம்மொழி உருவாக்கம், உலகத் தமிழர் ஒற்றுமை பேணல்,முதலான விஷயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது.
இந்த நோக்கங்களுடன் தமிழ் வழி இறை வழிபாடு, தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல், தமிழர் இறையாண்மை, தமிழ்ப்பாதுகாப்பு, தமிழ்க் கலை மீட்பு,
தமிழ்க் கல்வி, தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள், எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் ஊடகங்கள் போன்றவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மாநாட்டு ஆய்வுகளும் தமிழ் அறிஞர்கள் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும்.
மாநாட்டில் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு, தொடர்பான ஆவணக்காட்சியும், தமிழர் வாழ்வியல் வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள், இறுவெட்டுக்கள், ஒலி இழை நாடாகள், நிழற்படங்கள் முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் மாநாட்டுக் கருப்பொருளை ஒட்டி உலகளாவிய கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவையும் இடம்பெற உள்ளன.
இவற்றில் சிறந்தவற்றை உலகளாவிய அளவில் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் இலங்கை இந்திய நாடுகளில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செய்ற்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தை திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டில் பல நாட்டு அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள்.
எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர், மா நாட்டு மலருக்கு ஆக்கங்களைத் தர விரும்புவோர், கண்காட்சிகளில் இணைந்து கொள்ள விருபுவோர் அனைவரும் வரும் 31.07.2011 க்கு முன்பாக மாநாட்டுப் பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்," என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேல் விவரங்களுக்கு [email protected], [email protected], [email protected] முகவரிக்கு மின் அஞ்சல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications