மனைவியை குத்திக் கொன்று, 2 குழந்தைகளை வயரில் தூக்கில் தொங்கவிட்ட கணவன்
சென்னை: மனைவியை கத்தியால் குத்தியும் வயரால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்த கணவன், தனது இரு பச்சிளம் குழந்தைகளையும் வயரால் மின் விசியில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி யோகேஸ்வரன் (35). இவரது மனைவி ருக்மணி (30). இவர்களது குழந்தைகள் யுவராஜ் (3), தீபிகா (8 மாதம்).
யோகேஸ்வரன் பெரும் குடிப்பழக்கம் கொண்டவர். தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். நேற்று காலையிலும் இந்தத் தம்பதி இடையே மோதல் நடந்தது.
இதையறிந்த ருக்மணியின் சகோதரர்கள் நாகலிங்கம், சக்திவேல், சுப்பிரமணி ஆகியோர் பிற்பகலில் ருக்மணி வீட்டுக்கு வந்தனர். ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து பல இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் ருக்மணியையும் யோகேஸ்வரனையும் தேடினர். எங்கும் கிடைக்காததால் இன்று காலை சகோதரர்கள் 3 பேரும் மீண்டும் ருக்மணி வீட்டுக்கு வந்தனர். அப்போது வீடு பூட்டி கிடந்தது.
இந் நிலையில் யோகேஸ்வரன் தனது தம்பி பிரகாசுக்கு போன் செய்து, மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். இது குறித்து ருக்மணியின் அண்ணன் நாகலிங்கத்துக்கு பிரகாஷ் தகவல் தந்தார்.
இதையடுத்து அவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ருக்மணி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். குழந்தைகள் யுவராஜ், தீபிகா இருவரும் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர்.
ருக்மணியை கத்தியால் குத்தியும் டெலிபோன் வயரால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்துள்ளார் யோகேஸ்வரன்.
2 குழந்தைகளையும் கழுத்தை இறுக்கி கொன்று டெலிபோன் வயரால் மின் விசிறியில் தூக்கில் தொங்க விட்டுள்ளார். பின்னர் வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
வீட்டில் யோகேஸ்வரன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், என் மனைவி எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அவளது தொல்லை தாங்க முடியாமல் மனைவியையும் 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications