பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம் இலங்கைக்கு துரோகம் செய்தார் ரணில் - பசில்
கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து, இலங்கைக்கு துரோகம் செய்தவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமிங்கே என்று அமைச்சர் பசில் ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.
எம்பிலிபிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "ரணில்-பிரபா ஒப்பந்தம் என்ற பெயரில் 8 மாவட்டங்களை விடுதலைப் புலிகள் வசம் ரணில் கொடுத்திருந்தார். அதை நாங்கள்தான் மீட்டோம்.
ராஜபக்சே குடும்பத்தை குறிவைத்து அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றப்பத்திரிகை ஒன்றை தயாரித்துள்ளது. இவர்களின் நோக்கம் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதுதானே தவிர, தமிழர்களுக்கு உரிமைகள் பெறுவதல்ல," என்றார்.
ரணில் அமெரிக்க பயணம்
இதற்கிடையே ரணில் விக்ரமசிங்க ஒரு வார கால பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பயணத்தின்போது வாஷிங்டனில் நடக்கும் அனைத்துலக ஜனநாயக ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ரணில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் அமெரிக்காவின் முக்கிய தலைவர்களுடன் ரணில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குறிப்பாக செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications