ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி

இந்த அழைப்பை ஏற்று பல ஆயிரக்கணக்கானோர் மெரீனாவில் திரண்டனர். கொட்டும் மழை, பலத்த காற்று ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அத்தனை பேரும் அமைதியாக நின்று கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அஞ்சலி செலுத்தியது உருக்கமாக இருந்தது.
யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய அளவில் பல ஆயிரம் பேர் கூடியதால் கடற்கரையே, மனிதக் கடல் போல காணப்பட்டது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், நாம் தமிழர் தலைவர் சீமான், கவிஞர் தாமரை, பாமகவின் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
டாக்டர்கள், நர்சுகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஐடி நிறுவனத்தினர், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் இதில் பங்கேற்றனர்.
அனைவரும் உணர்ச்சி பொங்கும் குரலில் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சே கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முழங்கினர்.
சமீபத்தில்தான் பிறந்த தனது கைக்குழந்தையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டா பாலு என்பவர். அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறுகையில், ஆலந்தூரிலிருந்து எனது குடும்பத்துடன் இங்கு வந்துள்ளேன். இந்த ஒரு நாளை ஈழத் தமிழர்களுக்காக நாம் ஒதுக்காவிட்டால், நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது.
தமிழ் இனத்திற்காக நாம் ஒன்று கூடுவோம். நமது ஆதரவுகளை வலுவாக திரட்டுவோம். ராஜபக்சேவை விரட்டியடிப்போம், தண்டனை வாங்கித் தருவோம். நிச்சயம் தமிழ் ஈழம் மலரும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ் மொழியால் நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம். ஆனால் நான் பிறவியால் ஒரு மலையாளி. ஆனால் எனது பெற்றோர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறியவர்கள். எனக்கு தமிழ்தான் தெரியும். தமிழ்தான் புரியும். தமிழ் மட்டுமே எனக்கு மொழி. அந்த மொழி உணர்வால்தான் இங்கு நான் கூடியுள்ளேன் என்று பாலு கூறியபோது பெரும் ஆச்சரியமே ஏற்படடது.
பெங்களூரிலிருந்து அருள் என்ற ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் வந்திருந்தார். அவர் கூறுகையில், இன்று பெங்களூரிலிருந்து மட்டும் 600 சாப்ட்வேர் என்ஜீனியர்கள் இங்கு திரண்டுள்ளோம். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தமிழர்கள் அத்தனை பேரும் நன்கு அறிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனியாக பஸ் பிடித்து வந்துள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் மறக்காமல் சொன்னது தமிழ் ஈழம் மலரும், ஈழத் தமிழர்களின் கண்ணீர் துடைக்கப்படும், ராட்சசன் ராஜபக்சே தண்டிக்கப்படுவார் என்பதுதான்.
மிகுந்த உணர்ச்சிகரமாக நடந்த இந்த நிகழ்ச்சி சென்னைக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது என்பதில் மாற்றமில்லை.












Click it and Unblock the Notifications