தனியார் பொறியியல் கல்லூரிகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தி்ல் எந்தவித மாற்றமும் இல்லை என்று நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்தது.அந்த குழு விசாரணை நடத்தி கல்வி கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. தனியார் பொறியியல் கல்லூரிகள் தாங்கள் ஏற்கனவே வசூலித்துக் கொண்டிருக்கும் கட்டணைத்தையே வசூலிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து குழுவின் தலைவர் நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது,
தமிழகத்தில் மொத்தம் 464 தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன.அந்த கல்லூரிகளுக்கு ஒரு படிவம் அனுப்பி அதில் கல்வி கட்டணம் குறித்த அவர்களது கருத்துகளை பதிவு செய்து கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தோம்.இதில் வெறும் 191 கல்லூரிகள் மட்டும் தான் தங்கள் கருத்துகளை தெரிவித்தன.
அதிலும் வெறும் 76 கல்லூரிகள் மட்டும் தான் முறையான தணிக்கை செய்யப்பட்ட நகல்களை அனு்பபின. நாங்கள் செய்த ஆய்வில் கல்லூரிகளில் வரவை விட செலவு குறைவு என்பது தெரிய வந்தது.கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் 2011-12-ம் கல்வியாண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த விவரம் வருமாறு,
அங்கீகாரம் பெறாத படிப்புகள் - ரூ.32,500
அங்கீகாரம் பெற்ற படிப்புகள் - ரூ.40,000
நிர்வாக ஒதுக்கீடு மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளுக்கும் - ரூ.62,500
இவ்வாறு அவர் கூறினார்.