எதிர்கட்சிகளை குறைகூற ரங்கசாமிக்கு தகுதியில்லை: அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன்
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு அக்கட்சி தலைவரிடமே தஞ்சம் அடைந்துள்ள ரங்கசாமிக்கு எதிர்க்கட்சிகளை குறை கூற தகுதி இல்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் நாங்கள் சபையில் இல்லாதபோது பேசிய முதல்வர் ரங்கசாமி உண்மைக்கு புறம்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கடமையாற்ற எதிர்க்கட்சிகள் சபைக்கு வந்திருக்க வேண்டும் என்றும், மக்கள் எண்ணத்தை நிறைவேற்றும் அரசு இது என்றும் கூறியுள்ளார்.
மக்கள் விரோத காங்கிரஸ் அரசை அகற்றி விட்டு அதிமுக கூட்டணி அரசு அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பொது மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தனர்.
ஆனால் வாக்களித்த மக்களுக்கும், அதிமுகவிற்கும் பெரும் துரோகத்தை செய்து விட்டு ரங்கசாமி ஆட்சி அமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு அக்கட்சி தலைவரிடமே தஞ்சம் அடைந்துள்ளார் ரங்கசாமி. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை குறை கூற முதல்வர் ரங்கசாமிக்கு தகுதி இல்லை.
புதுவையில் 7 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து நேர்மையான முறையில் 50 சதவீத ஒதுக்கீடான 450 இடங்களை பெற வேண்டும்.
மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு பெறுவதில் மிகப் பெரிய ஊழல் நடைபெறுகிறது. இதை சட்டசபையில் நிரூபிக்க தயாராக உள்ளோம்.
ஜனநாயக கடமையாற்ற வேண்டுமானால் சட்டசபையைக் கூட்டினால் தானே பேச முடியும். சட்டசபையில் ஆளும் கட்சியை சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது. முதல்வர் ரங்கசாமி இதற்கு தயாரா என அன்பழகன் சவால்விட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications