ஜெ. ஆட்சிக்கு 6 மாதத்துக்கு 'நோ மார்க்': ராமதாஸ்

கடந்த திமுக ஆட்சியின்போது, திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய ராமதாஸ், திமுக ஆட்சிக்கு பூஜ்யம் மார்க் போட்டார். இதையடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டிய பாமகவுக்கு மக்கள் பூஜ்யம் இடங்களையே தந்தனர்.
இந் நிலையில் இன்று பா.ம.க. சார்பில் விவசாயிகளுக்கான மாதிரி பட்ஜெட்டை ராமதாஸ் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில்,
தொடர்ந்து 4வது ஆண்டாக விவசாயிகளுக்கான மாதிரி பட்ஜெட்டை பா.ம.க. வெளியிட்டுள்ளது. இந்த வருடம் மத்திய அரசு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வெளியிடும் என்று நம்புகிறோம். அரசு ஊழியர்களுக்கு ஊதிய குழு அமைப்பது போல, விவசாயிகளுக்கு உழவர் ஊதிய குழு அமைக்க வேண்டும்.
ஆண்டுதோறும் விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 வழங்க வேண்டும். குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க ஆயிரம் கோடி ரூபாய் சுழல் நிதியத்தை ஏற்படுத்த வேண்டும். விவசாய வளர்ச்சிக்கு சிறிய ரக எந்திரங்களை வழங்க வேண்டும்.
மதிய உணவில் வாழைப் பழத்துடன் நெல்லிக்காய் மற்றும் கீரை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அரசியல் சார்பில்லாத நலவாரியம் அமைத்து எல்லாவிதமான உதவிகளையும் செய்ய வேண்டும். திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், சேலம் ஆகிய மாநகர பகுதிகளில் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு உலகத்தரம் வாய்ந்த வணிக சந்தை உருவாக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு மோட்டார்களை இயக்க இலவச டீசல் வழங்க வேண்டும். பகலில் 6 மணி நேரம் தடை இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும். முதல்கட்டமாக தாமிரபரணி, வைப்பாறு ஆகியவற்றையும், பின்னர் காவிரி, பாலாறு ஆகிய நதிகளையும் இணைக்க வேண்டும் என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி,
கேள்வி: சமச்சீர் கல்வி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகியுள்ள நிபுணர் குழு அறிக்கை தள்ளுபடி ஆகுமா?
பதில்: தள்ளுபடி செய்யப்படும் என்று நம்புகிறோம். சி.பி.எஸ்.சி. தரத்திலான கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் போராடி வருகிறோம்.
கேள்வி: கடந்த தேர்தலில் பணம் கொடுத்தும் பயன் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்களே..
பதில்: மக்கள் எல்லோரிமும் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் விரும்பியவர்களுக்குத் தான் வாக்களித்தார்கள். கட்சிகள் பூத் செலவுக்கு பணம் கொடுப்பதில் இருந்துதான் ஊழலே தொடங்குகிறது. எங்களை போன்ற சிறிய கட்சிகளிலும் அந்த நோய் தொற்றிக் கொண்டு விட்டது. அதில் இருந்து மீள முடியவில்லை. இனி நாங்கள் “பூத்" செலவுக்கு பணம் கொடுக்க மாட்டோம். இதுபோல் எல்லா கட்சிகளும் முடிவு செய்ய வேண்டும்.
கேள்வி: சிறுவன் தில்சான் சுட்டுக் கொல்லப்பட்டதில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையே?
பதில்: ராணுவத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் காலதாமதம் ஏற்படுகிறது. குற்றவாளியை இதற்குள் கைது செய்திருக்க வேண்டும்.
கேள்வி: அ.தி.மு.க. ஆட்சி பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?
பதில்: அதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் ஆக வேண்டும்
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் சம்மந்தப்பட்டிருப்பதாக சிபிஐ கூறியுள்ளதே.
பதில்: சட்டம் அதன் கடமையைச் செய்யும். செய்யட்டும்.
கேள்வி: மாறனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமா, வேண்டாமா?
பதில்: அதுகுறித்து பிரதமர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என்றார்.
இந்தப் பேட்டி முடிந்த சில நிமிடங்களில் தயாநிதி ராஜினாமா செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications