சிறுவன் தில்ஷனைக் கொன்றது நான் தான்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வாக்குமூலம்

சென்னை இராணுவக் குடியிருப்புக்குள் பழம் பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனை இராணுவ அதிகாரி யாராவது தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று தில்ஷனின் உறவினர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிய வந்தது.
இந்த வழக்கை சிபி-சிஐடி விசாரித்து வருகிறது. ஏற்கனவே மர்ம காரில் வந்த லெப்டினன்ட் கர்னல் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தான் யாரையும் சுட்டுக் கொல்லவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதன் பிறகும் சில அதிகாரிகளிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கந்தசுவாமி ராம்ராஜ்(58) என்பவர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி தான் லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். விசாரணையில் தில்ஷனைக் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார் என்று சிபி-சிஐடி ஏடிஜிபி சேகர் தெரிவித்தார். அவர் நேற்று மதுரைக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் தான் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்ஷனை சுட பயன்படுத்தப்பட்ட யுஎஸ் ஸ்பிரிங்பீல்டு நீள் துப்பாக்கி கூவம் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக கொலையாளி யார் என்று தெரியாமல் இருந்த பிரச்சனை தீர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications