சர்வதேச விமானத்தில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட 3 பேர் கைது
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறக்கையில் குடித்துவிட்டு கும்மாளம் செய்த 3 பயணிகள் செய்யப்பட்டனர்.
232 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு மது வழங்கப்படும். விமானத்தில் இருந்த சென்னையைச் சேர்ந்த தினகரன் (30), திருவாரூரைச் சேர்ந்த அந்தோணி மெர்வின் (32), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராம்பாபு (28) ஆகிய 3 பேர் 2 முறை மது அருந்திவிட்டு மீண்டும் மது கொடுக்குமாறு விமானப் பணிப் பெண்களிடம் கேட்டுள்ளனர்.
குறிப்பிட்ட அளவு தான் மது அருந்த வேண்டும். நீங்கள் ஏற்கனவே அதிகம் குடித்துள்ளீர்கள் என்று கூறி பணிப் பெண்கள் கூடுதலாக மது கொடுக்க மறுத்துவிட்டனர்.
அவ்வளவு தான் போதை ஆசாமிகள் 3 பேரும் பணிப் பெண்களுடன் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதிலும் ஒரு பணிப் பெண்ணை தாக்கவும் முயன்றனர். பயந்து போன அவர்கள் கேப்டனிடம் தெரிவித்தனர். விசாரிக்க வந்த அவரிடமும் இந்த 3 பேர் தகாராறு செய்தனர்.
இவர்களிடம் பேசி பயனில்லை என்று தீர்மானித்த கேப்டன் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, விமானம் தரையிறங்கியவுடன் அவர்களை கைது செய்ய ஏற்பாடு செய்தார்.
விமானத்தை தரையிறக்கும் முன் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். போதை ஆசாமிகள் 3 பேரும் சீட் பெல்டை மாட்டாமல் எழுந்து நின்று ஆட்டம் போடத் துவங்கிவிட்டனர். இதனால் விமானம் தரையிங்க முடியாமல் 15 நிமிடம் வானில் வட்டமிட வேண்டியதாகிவிட்டது.
இவர்கள் ரகளையைப் பார்த்து ஆத்திரம் அடைந்த மற்ற பயணிகள் 3 பேரையும் வலுக்கட்டாயமாக சீட்டில் அமர வைத்து சீட் பெல்டை மாற்றினர். அதன் பிறகு விமானம் தரையிறங்கியது. இந்த ரகளையால் 10. 25 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் 10.40 மணிக்கு தரையிறங்கியது.
விமானத்தின் கதவு திறக்கப்பட்டவுடன் ஏர் இந்தியா நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் வந்து போதை பயணிகள் 3 பேரையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை முடிந்த பிறகு அவர்கள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விமான நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.