தேவையற்ற வீண் செலவுகளைக் குறைக்குமாறு அமைச்சர்களுக்கு பிரணாப் முகர்ஜி உத்தரவு
டெல்லி: மத்திய அமைச்சர்கள் தேவையற்ற வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து அமைச்சர்களுக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக 11ம் தேதி திங்கள்கிழமையன்று அனைத்து அமைச்சர்களுக்கும் மத்திய அரசு உத்தரவுக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்ய வேண்டும், 5 நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்களை நடத்தக் கூடாது, அமைச்சகங்களுக்கு புதிய வாகனங்கள் வாங்கக் கூடாது, புதிய பதவிகள் எதையும் உருவாக்கி ஆட்களை நியமிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இவற்றை ஒவ்வொரு அமைச்சரும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கண்டிப்பான உத்தரவு குறித்து பிரணாப் முகர்ஜியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய அரசின் துறைகளுக்கு கடுமையான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பான குறிப்பை நான் அனுப்பி வைத்துள்ளேன்.
சில குறிப்பிட்ட துறைகளில் கடுமையை பின்பற்ற வேண்டும் என்பதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். அனாவசிய செலவினங்களை தவிர்த்து விட்டு, அந்த பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
அனாவசியமான வீண் செலவுகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறேன். அதே நேரத்தில், ஆக்கப்பூர்வமான செலவினங்களில் எந்த கடுமையும் காட்டப்படாது என்றார் அவர்.