நிலமோசடி-வள்ளியூர் காவல் நிலையத்தில் குவியும்-ஒரே நாளில் 116 பேர் புகார்
வள்ளியூர்: வள்ளியூரில் நில மோசடி தொடர்பாக நேற்று ஒரே நாளில் 116 பேர் தனிப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதில் முதல் கட்டமாக 4 பேரின் மனுவுக்கு வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நில மோசடி அதிகரித்து வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள் மாவட்டத்தில் நிலுவையில் உள்ளன. நில மோசடி தொடர்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு முகாம் காவல்துறை உட்கோட்டத்தில் நடத்தப்படுகிறது.
நேற்று வள்ளியூர் காவல் நிலையத்தில் நடந்த சிறப்பு முகாமை கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நில மோசடி தொடர்பாக விசாரிக்கும் தனிப்பிரிவு டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜூ, செந்தாமரைகண்ணன் உள்பட தனிப்பிரிவு போலீசார் நில மோசடி தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார் மனுககளை பெற்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள நில மோசடி புகார்களை அந்தந்த காவல் நிலையத்தில் விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர். வள்ளியூர், ராதாபுரம், திசையன்விளை, உவரி, பணகுடி, கூடன்குளம், ராதாபுரம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்களும், ஆண்களும் காலையில் இருந்தே வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க நீண்டவரிசையில் நின்றிருந்தனர். மொத்தம் 116 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications