சூறாவளி, ராட்சத அலைகள்: கடலில் படகு மூழ்கியது-4 மீனவர்கள் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் சென்ற படகு சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியது. அவர்கள் நான்கு பேரும் பலியானார்கள். இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆல்பர்ட், அவரது அண்ணன் மகன் டைசன் (15), திரேஸ்புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்னாசி காந்தி (55), சாமி (40), தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த தொம்மை என்கிற பாலு (70) ஆகிய 5 பேரும் தூத்துக்குடி கடலில் மீன்பிடிக்க நள்ளிரவு 11 மணியளவில் புறப்பட்டு சென்றனர்.
அதிகாலை நேரத்தில் நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது கடும் சூறாவளிக்காற்று வீசியது. மேலும், கடலில் ராட்சத அலைகளும் எழும்பியது.
இதில் சிக்கி படகு கவிழ்ந்து. படகில் இருந்தவர்களில் 4 பேர் கடலில் மூழ்கினர். பாலு மட்டும் படகை பிடித்து உயிர் தப்பினார். இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடலில் உயிருக்கு போராடிய மீனவர் பாலுவை மீட்டனர்.
பின்னர் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி 4 பேரையும் தேடினார்கள். அப்போது மீனவர்கள் இன்னாசி காந்தி, சாமி ஆகிய 2 பேரின் உடல்கள் மட்டும் வலையில் சிக்கிக் கிடந்தது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் கடலுக்குள் சென்று 2 பேரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பாலுவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடலில் மூழ்கியவர்களில் ஆல்பர்ட் மற்றும் சிறுவன் டைசன் ஆகியோரின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. அவர்களது உடலை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications