தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி: விவசாயிகள் கவலை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக அங்கு பயிர்கள் பொதி பருவத்தில் வாடி வதங்கி காட்சியளிக்கின்றன. கருகிய பயிர்களை கழுதைகள் மேய்வதால் விவசாயிகள் நொந்து போயுள்ளனர்.
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 86 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்களை வளப்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் தாமிரபரணி தண்ணீர் மூலம் பயன் பெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் ஸ்ரீவை வடகால், தென்கால், மருதூர் மேல்கால், கீழக்கால் ஆகிய கால்வாய்கள் மூலம் விவசாயிகள் தாமிரபரணி தண்ணீரை பெற்று விவசயாம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் பாபநாசம் அணை திறக்கப்பட்டபோது சுமார் ஒரு வாரம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு ஒரு வார காலமாக தண்ணீர் இன்றி அங்குள்ள விளை நிலங்கள் வறண்டு காட்சியளிக்கின்றன.
இம்மாவட்டத்தில் தற்போது முன்கார் சாகுபடி முடிவடையும் தருவாயில் சுமார் 12 ஏக்கர் நெற்பயிர்கள் கதிரும், பொதியுமாக காட்சியளிக்கின்றன. ஆறுமுக மங்கலம், அரசன்குளம், கொற்கை, கணபதி சமுத்திரம், செவ்வத்தியபுரம் பகுதியில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாததால் வயல் வெளியில் பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் விவசாயிகள் நெற்பயிர்களை கண்டும் காணாமலும் வி்ட்டு விட்டதால் கழுதைகள் அவற்றை மேய்ந்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கார்சாகுபடியும் துவங்கியுள்ள நிலையில் விளைநிலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கொடுங்கணி, முக்கணி, வாழவல்லன், உமரிக்காடு, குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் தற்போது வீழ்ச்சியடைந்து வருவதால் பாபநாசம் அணையில் இருந்து தங்களுக்கு குறைந்தபட்ச தண்ணீர் தரப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications