போலிச் சான்றிதழ்: பாபா ராம்தேவ் உதவியாளர் இன்று கைது? - சிபிஐ தகவல்
டெல்லி: போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றதற்காக பாபா ராம்தேவின் உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவை சிபிஐ இன்று கைது செய்யக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யோகா குரு பாபா ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா போலிச் சான்றிதழ்களை சமர்பித்து பாஸ்போர்ட் பெற்றுள்ளார். பாலகிருஷ்ணாவின் கல்விச் சான்றிதழ்கள் போலி என்பதை சிபிஐ கண்டுபிடித்தில் இருந்து அவர் மாயமாகிவிட்டார். இது குறித்து விசாரணைக்கு வருமாறு பாலகிருஷ்ணாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
பாலகிருஷ்ணாவின் வீடு ஹரித்வாரில் உள்ளது. டோராடூனில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு உள்ளூர் போலீசார் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக பாலகிருஷ்ணா தலைமறைவாகியுள்ளார். தேவைப்பட்டால் அவரை கைது செய்யக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலிச் சான்றிதழ்கள் மூலமாக பாஸ்போர்ட் பெற்றதற்காக சிபிஐ பாலகிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகி பாலகிருஷ்ணாவின் பாஸ்போர்டைத் திரும்பப் பெறுமாறு சிபிஐ வலியுறுத்தியது.
முன்னதாக பாலகிருஷ்ணாவைக் காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்துத் தருமாறும் அவரது பாதுகாவலர் ஜெயேந்திர சிங் அஸ்வால் ஹரித்வாரில் உள்ள கன்கால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாலகிருஷ்ணாவின் திவ்ய யோக் ஆசிரமத்திற்கு சென்றேன். பாதாஞ்சலி அலுவலகத்திற்கு அவருக்கு பாதுகாப்பாக செல்வதற்காக சென்றேன். ஆனால் அவர் என்னை முதலில் போகுமாறும், அவர் பின்பு வருவதாகவும் தெரிவித்தார்.
நானும் மாலை வரை காத்திருந்தேன் பாலகிருஷ்ணா வரவேயில்லை. உடனே திவ்ய யோக் ஆசிரமத்திற்கு சென்று பார்த்தால் அவர் அங்கு இல்லை. எனவே, அவரை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications