சபரிமலை புல்மேடு விபத்துக்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: கேரள குற்றப்பிரிவு அறிக்கை
திருவனந்தபுரம்: சபரிமலை புல்மேட்டில் 102 பக்தர்கள் பலியான விபத்துக்கு வனத்துறை, போலீசார் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என கேரள குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி மாலை மகரஜோதியை தரிசிப்பதற்காக புல்மேடு வனப்பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தரிசனம் முடிந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் திரும்பிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் பலியாகினர். இது தொடர்பாக விசாரிக்க கேரள குற்றபிரிவுக்கு கேரள அரசு உத்தரவிட்டது.
அதன்படி விசாரணை நடத்திய குற்றபிரிவு போலீசார் தங்களது அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். புல்மேட்டில் நெரிசல் ஏற்படுவதற்கு வனத்துறை, கேரள போலீஸ் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஆகியோரின் அலட்சியமே முக்கிய காரணம். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
குறுகிய இடத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும் பாதுகாப்பு பணியில் குறைந்த போலீசாரே ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் திருவிதாங்கூர் தேவசம்போர்டும் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கவில்லை.
இந்த விபத்துக்கு பின்னணியில் சதி இருப்பதாக தெரியவில்லை என்று அறிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications