நில அபகரிப்பு வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல: இல. கணேசன்
சேலம்: நில அபகரிப்பு வழக்குகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். அதனால் இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறமுடியாது என்று பாஜக தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதீய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
2ஜி ஊழலில் சிக்கித் தவிக்கும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். ஆனால் திமுகவை விட பெரிய ஊழலில் சிக்கித் திண்டாடுவது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் ஆட்சியை அகற்றினால் தான் ஊழலை ஒழிக்க முடியும்.
எனவே, வரும் 2014-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் பாஜகவைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
2ஜி ஊழல் குறித்து பிரதமருக்கும், ப. சிதம்பரத்திற்கும் தெரியும் என்று ஆ. ராசா கூறுகிறார். அது உண்மையாகக் கூட இருக்கலாம்.
ஊழல் வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அது நடக்க வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்கள் குறித்து தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாஜக மனதாரப் பாராட்டுகிறது. இந்த நடவடிக்கைகளால் நடுத்தர மக்கள், அதற்கு கீழ் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது ஒன்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அன்று என்றார்.












Click it and Unblock the Notifications