மு.க.அழகிரியின் கூட்டாளி கோ.தளபதி மீது மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளியான கோ.தளபதி மீது மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்குப் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருவதால் இவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை தியாகராஜர் காலனியை சேர்ந்தவர் கழுவத்தேவர். அவர் நேற்று மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க்கை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில்,
நான் 1946-ம் ஆண்டு மதுரை மீனாட்சி மில்லில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு வேலை செய்து வந்ததால் அங்கேயே மீனாட்சி மில்சின் தியாகராஜர் காலனியில் எனக்கு வாடகைக்கு தற்போது நான் குடியிருக்கும் வீட்டை ஒதுக்கினர்.
அப்போது இந்த வீட்டின் வாடகை ரூ.10 ஆகும். இந்த நிலையில் மீனாட்சி மில் காலனி வீடுகளை விற்பனை செய்வதாக அறிவிப்பு செய்தது. நான் அந்த வீட்டை எனக்கு சொந்தமாக்கி கொள்ள ரூ.15 ஆயிரத்து 20-ஐ முன் பணமாக கட்டினேன். பிறகு மீதமுள்ள பணத்தை 3 தவணைகளில் கட்ட வேண்டும் என்று கூறினார்கள்.
நான் கடந்த 1986-ம் ஆண்டு மீனாட்சி மில்லில் இருந்து ஓய்வு பெற்றேன். நான் ஓய்வு பெறும்போது எனது ஓய்வூதிய பணத்தில் இருந்து ஒரு பங்கு பணத்தை வீட்டிற்காக எடுத்து கொண்டார்கள். கடந்த 4.7.2007-ல் வட்டியுடன் ரூ.47 ஆயிரம் கட்டினேன். ஆனால் இன்றுவரை எனது பெயருக்கு கிரையம் செய்து தரவில்லை.
இந்த நிலையில் மீனாட்சி மில் நிர்வாகத்தில் உள்ள சிலர் துணையோடு எனக்கும், என்னைப்போல உள்ள தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டையும், இடத்தையும் சட்ட விரோதமாக மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி, அவரது நண்பர் ஆறுமுகசாமி ஆகியோர் வாங்கினர். இதை அறிந்த நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடைக்கால தடை பெற்றேன்.
இதை அறிந்த தளபதி மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் என் மீது கூலிப்படையை ஏவினர். இந்த கூலிப்படையுடன் வந்த தி.மு.க.வை சேர்ந்த கிருஷ்ணபாண்டி, ராமர், ரவிச்சந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் தளபதி மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டி எனது கடையை அடித்து நொறுக்கினர்.
எனவே என்னை தாக்கி எனது வீட்டையும், எனது இடத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தளபதி, ஆறுமுகசாமி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த கிருஷ்ணபாண்டி, ராமர், ரவிச்சந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரிக்க எஸ்.பி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தளபதி மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் அவர் கைதாகியுள்ளார். இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கு வந்துள்ளது. இதேபோல மேலும் சில வழக்குகள் வந்தால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று தெரிகிறது.
ஏற்கனவே அழகிரியின் இன்னொரு உதவியாளரான அட்டாக் பாண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகியிருப்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications