கேரளாவில் பஸ் கட்டண உயர்வு: குறைந்த கட்டணம் ரூ.5- மாணவர்கள் கட்டணத்தில் மாற்றமில்லை
திருவனந்தபுரம்: டீசல் விலை உயர்வை அடுத்து, வரும் 7ம் தேதி நள்ளிரவு முதல், கேரளாவில் பஸ் போக்குவரத்தில் குறைந்த கட்டணம் 5 ரூபாயாக உயர்த்த கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் பஸ் போக்குவரத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இதையடுத்து, மாநிலத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்த கோரி, பஸ் உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆட்சியில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு நடத்த, நீதிபதி ராமசந்திரன் கமி்ட்டி நியமிக்கப்ட்டது. அந்த கமிட்டி தனது அறிக்கையில் பஸ் கட்டணத்தை உயர்த்த பல படிகளை தெரிவித்திருந்தது.
இதையடுத்து பஸ் உரிமையாளர்களுடன், போக்குவரத்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்த கேரள மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன் விபரம் வருமாறு: சாதாரண மற்றும் விரைவு பஸ்களில் மட்டுமே கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. டீலக்ஸ் மற்றும் அதிவிரைவு பஸ்களில் பழைய கட்டணமே தொடரும்.
சாதாரண பஸ்களில் 4ல் இருந்து பயணக் கட்டணம் 5 ரூபாயாகவும், விரைவு பஸ்களில் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. முன்பு குறைந்த தூரம் இரண்டரை கி.மீ., என்ற அளவில் இருந்து, தற்போது 5 கி.மீட்டராக நீட்டப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் சலுகை பயணக்கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அது பழைய கட்டணத்தை போல இரண்டரை கி.மீட்டருக்கு, 50 பைசா என்ற கட்டணமே பெறப்படும். மாணவர்களுக்கு கூடுதல் சவுகரியமாக, எல்.எஸ்.எஸ் பஸ்களிலும் சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம். மாணவர் கட்டணத்தில் 50 சதவீதம் அதிகரிக்குமாறு, அறிக்கையில் தெரிவித்திருந்தது. அந்த கட்டணம் மிக அதிகமாக தெரிந்ததால், மாநில அரசு அதை அமல்படுத்தவில்லை.
புதிய கட்டண முறையில், சாதாரண பஸ்களில் முதல் 10 கி.மீட்டர்களுக்கு 5 ரூபாயும், அடுத்தடுத்த 5 கி.மீட்டர்களுக்கு 2.75 ரூபாய் உயர்வு இருக்கும். முதல் ஸ்டேஜை கடக்கும் பயணி 7.75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 25 பைசா பயன்பாட்டில் இல்லாததால், அதை 8 ரூபாய் என முழுமைப்படுத்தி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 7ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும்.
கர்நாடகாவை அடுத்து கேரளாவிலும் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நஷ்டத்தில் இயங்கும் தமிழக போக்குவரத்து கழகங்கள், தொடர்ந்து குறைந்த கட்டணம் 2 ரூபாய் என வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications