லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. வீட்டில் திருட்டு-மூன்று பேர் கைது
ஆத்தூர்:
லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. வீட்டில் கொள்ளை உட்பட பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை, தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்த நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அடுத்த நாகியம்பட்டி பிரிவு சாலையை சேர்ந்தவர் மகேஸ்வரி. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.,யாக உள்ளார். இவரது தந்தை ஓய்வுப்பெற்ற ஏ.எஸ்.பி. சந்திரசேகரன். கடந்த மே 28ம் தேதி இரவு சந்திரசேகரன் மட்டும் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், பீரோவில் இருந்த 17 சவரன் தங்கநகை, வைர மோதிரம், 45 ஆயிரம் ரொக்கம் என 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
மேலும், கெங்கவல்லி என்ற பகுதியில் உள்ள பரமசிவம், சிவக்குமார், முருகேசன், ஆணையம்பட்டி முருகன், அன்பழகன் ஆகியோரின் வீடுகளிலும், ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர் சாலைகளில் நடந்து சென்ற பெண்களிடமும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
தொடர் கொள்ளையர்களை பிடிக்க, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் மேற்பார்வையில், சேலம் எஸ்.பி., மயில்வாகனன், ஏ.எஸ்.பி., ஈஸ்வரன், ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கம், இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு, நடராஜன், எஸ்.ஐ.,க்கள் அன்பரசன், சத்தியமூர்த்தி, கங்காதரன் உள்ளிட்டோர் அடங்கிய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர், ஆங்காங்கே, ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தம்மம்பட்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற மூவர், போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில், அவர்கள் ஓமலூர் மாமங்களம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24), சேலம் ஜாகீர் அம்மாபாளையம் சக்திவேல்(27), மாரியப்பன்(24) எனத் தெரிந்தது.
தீவிர விசாரணையில், இம்மூவரும் எஸ்.பி., மகேஸ்வரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து, 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆத்தூர், கெங்கவல்லி பகுதியில் கொள்ளையிட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 12 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 52 சவரன் நகைகள், பைக் மற்றும் வழிப்பறி ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications