For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலவச மின்விசிறி, மிக்சி,கிரைண்டர் திட்டத்துக்கு ரூ.1,250 கோடி ஒதுக்கீடு

By Siva
Google Oneindia Tamil News

Free Fan, Mixie, Grinder Scheme
சென்னை: தமிழக அரசு, தனது மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் திட்டத்துக்கு ரூ. ஆயிரத்து 250 கோடியும், இலவச தங்கத் தாலி திட்டத்துக்கு ரூ. 514 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இது குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்ததாவது:

தேர்தல் அறிக்கையில் வாக்களித்தப்படி பெண்களுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்கும் திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் அன்று இந்த அரசு தொடங்கும்.

அரிசி பெறத் தகுதியுள்ள குடும்ப அட்டை வைத்து உள்ள 1.83 கோடி குடும்பங்களிலுள்ள தாய்மார்கள் படிப்படியாக இதன் மூலம் பயனடைவார்கள்.

2011- 2012-ஆம் ஆண்டில் சுமார் 25 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறும். இதற்காக ரூ.ஆயிரத்து 250 கோடி இந்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலவச தங்கத் தாலி திட்டம்:

திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்கக்காசு வழங்கவும், அப்பயனாளிகள் பட்டம், பட்டயப்படிப்பு முடித்திருப்பின், அவர்களுக்கான திருமண உதவித் தொகையை உயர்த்தி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதை ஏற்கனவே தெரிவித்துள்ளேன். இத்திட்டத்திற்காக, 2011-2012-ம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் 514 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண் சிசுக் கொலையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, தொட்டில் குழந்தை திட்டம் 1992-ம் ஆண்டு சேலத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் பெண் சிசுக் கொலை இருப்பதாக தெரியவந்த மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி மாவட்டங்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.

31.3.2011 வரையில் 3.131 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதைக் காட்டுகின்றது. எனவே, 2011-2012-ம் ஆண்டில் இந்த 5 மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்களை அமைத்து இத்திட்டத்தை 47.45 லட்சம் ரூபாய் செலவில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது.

இனி, முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைக்கான வைப்புத் தொகை 50 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டு பெண் குழந்தைகளுக்கான வைப்புத் தொகை 25 ஆயிரம் ரூபாயாகவும் இந்த அரசால் உயர்த்தி வழங்கப்படும். இது பெண் சிசுக் கொலைத் தடுப்பிற்கு ஒரு முக்கிய உந்துசக்தியாகத் திகழும். தற்போது, 15 ஆயிரத்து 313 அங்கன்வாடி மையங்கள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.

இந்த அரசு, பல்வேறு திட்டங்களில் உள்ள நிதியை ஒருங்கிணைத்து, குறித்த கால அளவிற்குள் படிப்படியாக அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கும் என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.

English summary
TN government has allotted Rs. 1, 250 crore for free fan, mixie, grinder scheme and Rs. 514 crore for the free mangalyam scheme. The former scheme will be launched on september 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X