கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்-ராட்சத அலைகள் ஊருக்குள் ஊடுறுவின
குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் நேற்று மதியம் முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 15 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து அங்குள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவரை தாண்டி ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் கடற்கரையோர மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.
கடற்கரை மணல் பரப்பில் நிறுத்தப்பட்டு இருந்த கட்டுமரம், பைபர் வள்ளங்களையும் கடல் நீர் இழுத்து செல்லும் அபாயம் ஏற்பட்டதால் மீனவர்கள் அவற்றை பாதுகாப்பான மேடானஇடத்துக்கு எடுத்து சென்றனர்.
தொடர்ந்து ராட்சத அலைகள் எழுநததால் கடற்கரையோர மீனவர்கள் இரவில் வீட்டில் தங்க பயந்து சர்ச் வாளகத்தில் தங்கினர். கடல் நீர் ஊருக்குள் புகுந்தது குறித்து அழிக்கால் பங்குதந்தை தோரிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏ, நாகர்கோவில் ஆர்டிஓ ராஜேந்திரன், அகதீஸ்வரம் தாசில்தார் புரூஸ், குளச்சல் டிஎஸ்பி ரவிசங்கர், கணபதிபுரம் பேரூராட்சி தலைவர் தாணுலிங்கம் ஆகியோர் அழிக்கால் பகுதிக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications