'வீரபாண்டி ஆறுமுகம்': இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சரணடைய உத்தரவு
சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மிக நெருக்கமாக இருந்த சேலம் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் போலீசில் சரணடைய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு மற்றும் பிரிமியர் மில் நிலம் அபகரிப்பு வழக்குகளில் சேலம் கொண்டலாம்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய லட்சுமணன், வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கவுசீக பூபதி, சேலம் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், ஆடிட்டர் துரைசாமி, துரைசாமி, உள்பட பலரின் பெயர் போலீசார் தேடப்படும் பட்டியில் இடம் பெற்றுள்ளது.
இதில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவர் பணியில் சேராமல் மருத்துவ விடுப்பில் சென்றார். 2 வழக்குகளிலும் அவரது பெயர் இடம் பெற்றதால் அவர் தலைமறைவானார். அவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த சென்னை நீதிபதி ராஜசூர்யா, நாளை (9ம் தேதி) சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி 3 நாள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் விசாரணை முடிந்த பிறகு அவர் சேலம் நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்படும்போது முன் ஜாமீன் பெறலாம் என்றும் உத்தரவிட்டார்.
இந் நிலையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணனை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது. மேலும் அவர் மீது 2 வழக்குகளும் பதிவானதால் அவர் தேடப்படும் குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டார். அவரது மனைவியை பலமுறை சூரமங்கலம்டி போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தியும் அவரைப் பிடிக்க முடியவில்லை.
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் நாளை காலை 10 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications