ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமியின் டெல்லி வீடு மீது காங்கிரஸார் தாக்குதல்
டெல்லி: ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமியின் டெல்லி வீடு மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
சமீபத்தில் இரண்டு சர்ச்சைகளில் சிக்கினார் சாமி. முதலில் இந்தியாவில் வாழும் சிறுபான்மையினர்கள் தாங்கள் இந்துக்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒத்துக் கொள்பவர்கள்தான் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தால் அவர் விசிட்டிங் புரபஸராக பணியாற்றி வரும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தியாவிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி தேசிய சிறுபான்மையினர் ஆணையம் வழக்கு தொடர தீர்மானித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சோனியா காந்திக்கான செலவுகள் குறித்து ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்திருந்தார் சாமி. இதுவும் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
சாமியின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து கிழக்கு டெல்லியில் உள்ள நிஜாமுதீனில், சுப்பிரமணியசாமி வீட்டு முன்பு கூடி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வீட்டில் கல்வீசித் தாக்கப்பட்டது.
அப்போது வீட்டில் சாமி இல்லை. இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து காங்கிரஸாரைக் கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications