கருணாநிதி குடும்பத்து 'பேப்பரை'யெல்லாம் படித்து 'டைம் வேஸ்ட்' பண்ணக் கூடாது-ஜெயலலிதா கண்டிப்பு
சென்னை: கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தி வரும் பேப்பர்களையெல்லாம் படித்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று அதிமுக உறுப்பினர்களை கண்டித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசுகையில்,
தி.மு.க. பத்திரிகையில், பட்ஜெட்டைப் பற்றி பல்வேறு குறைகளை கூறியுள்ளனர். அறிவித்துள்ள திட்டங்களை புரிந்து கொள்ளாமல், வேண்டும் என்றே குறை கூறுகின்றனர். ஐந்து முறை முதல்வராக இருந்தார், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார், என்கின்றனர். ஆனால், சட்டசபையில் அவர் கால் கூட வைப்பதில்லை.
இன்னொருவரை, "தளபதி, தளபதி' என்கின்றனர். அவர், பள்ளி குழந்தைபோல், "சட்டசபையில் இந்த இடத்தில் தான் நாங்கள் உட்காருவோம்' என அடம் பிடிக்கிறார். இவர்கள் எல்லாம் இப்படி செய்வர் என தெரிந்து தான், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட அவர்களுக்கு மக்கள் தரவில்லை என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் குடும்பப் பத்திரிக்கையைப் படித்து விட்டு விஜயபாஸ்கர் பேசுகிறார். அந்தப் பத்திரிக்கையை யாருமே படிப்பதில்லை. இவர் மட்டும் ஏன் அதைப் படித்து விட்டு இங்கு வந்து பேசி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார். அந்த பத்திரிக்கையைப் படிக்கும் நேரத்தில் நல்ல புத்தகத்தைப் படிப்பதற்கு செலவிடலாம் என்று கண்டிப்பான குரலில் சொன்னார்.












Click it and Unblock the Notifications