மீண்டும் கம்யூனிஸ்டுகளுடன் கைகோர்க்க முயலும் மன்மோகன் சிங்!

கடந்த 2008ம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மத்திய அரசுக்கு தந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் பெரும் தோல்வியைத் தழுவ, காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து நடந்த கேரளா, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களிலும் கம்யூனிஸ்டுகளுக்கு தோல்வியே ஏற்பட்டது.
இந் நிலையில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் பொலிட் பீரோ உறுப்பினரும் சீதாராம் யெச்சூரியும், கேரள மாநிலத்தை சேர்ந்த 5 மார்க்சிஸ்ட் எம்.பிக்களும் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். கேரள மாநில திட்டங்கள் குறித்துப் பேசவே அவர்கள் சென்றனர்.
ஆனால், அவர்களிடம் மன்மோகன் சிங் கொடுத்த நேரத்தை விட நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினார். கடந்த ஆட்சியின்போது இடதுசாரிகள் வழங்கி வந்த நல்ல ஆலோசனைகளை தான் இழந்து விட்டதாக சிங் கவலையுடன் கூறினார்.
இதன்மூலம் இடதுசாரிகளுடன் மீண்டும் காங்கிரஸ் கைகோர்க்க விரும்புவதை சூசகமாக சுட்டிக் காட்டியதாகத் தெகிகிறது.
பல்வேறு ஊழல் பிரச்சனைகள் தொடர்பாக விவாதம் வந்தபோது, என் மீது நம்பிக்கை இல்லையா? என்று பிரதமர் கேட்டுள்ளார். அதற்கு மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள், "உங்கள் நேர்மை மீது நாங்கள் ஒரு போதும் சந்தேகப்பட்டது இல்லை" என்று பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து நாம் மீண்டும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று மன்மோகன் நேரடியாகவே தனது விருப்பத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
திமுக உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இடதுசாரிகளை தனது நட்பு வளையத்துக்குள் வைத்து கொள்ளும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் ஒப்புதலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டுக்களில் பா.ஜ.க. பிரதமர் மீது நேரடியாக குற்றம்சாட்டி, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நெருக்கடி தந்து வரும் நிலையில், இடதுசாரிகள் இந்த விவகாரத்தில் பிரதமர் மீது நேரடியாக புகார் ஏதும் கூறாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications