ஊழலை ஒழிக்கும் அரசியல் திராணி பிரதமரிடம் இல்லை- பாஜக கடும் சாடல்

ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று அன்னா ஹஸாரே கைது குறித்து விளக்கி அறிக்கை வாசித்தார். அதன் பின்னர் அருண் ஜேட்லி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சில மாதகங்களாக விவாதத்தில் இருந்து வரும் ஒரு விவகாரம், கடந்த சில நாட்களில் உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்று நடந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் கூறுகையில், யார் சட்டத்தை இயற்றுவது என்ற கேள்வியை எழுப்பினார். சட்டத்தை இயற்றுவது நாடாளுமன்றம்தான் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் ஊழலுக்காக போராடி போராடி விரக்தி அடைந்துள்ள மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து இந்த அரசு குற்றம் சாட்டுகிறது. தயவு செய்து அவர்களை குற்றம் சாட்டாதீர்கள்.
ஊழலை ஒழிக்க இந்த அரசு என்ன உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரதமர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். ஊழலை நான் ஒழிப்பேன், என்னிடம் அதை விடுங்கள் என்று கூறும் அரசியல் தைரியம், திராணி பிரதமருக்கு வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது அவரிடம் இல்லை.
இந்த நாட்டை ஆட்சி புரிவது யார் என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது. இந்த ஆட்சி அராஜகப் பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. போலீஸ் சீருடையில் ஒழிந்து கொண்டு போராட்டத்தி்ல் ஈடுபடுபவர்களை ஒடுக்கி வருகிறது.
இந்த நாட்டு குடிமகன் ஒவ்வொருவருக்கும் தனது கருத்துக்களைத் தெரிவிக்க முழு உரிமை உண்டு. அதைத் தடுக்க இந்த அரசு முயலுகிறது.
இந்த அரசுக்கு ஊழலை ஒழிக்கும் தகுதியும், திறமையும், துணிச்சலும் இல்லை. ஊழலை ஒழிக்க வலுவான நடவடிக்கையை பிரதமர் எடுத்தால் அவருக்குப் பின்னால் நாங்கள் நிற்போம், இந்த நாடு நிற்கும், நாட்டு மக்கள் நிற்பார்கள். மாறாக ஏற்கனவே விரக்தியடைந்த நிலையில் இருக்கும் மக்களை விமர்சிக்காதீர்கள் என்றார் ஜேட்லி.












Click it and Unblock the Notifications