தேசியக் கொடிகளை சுமந்தபடி போராடும் மக்களைப் பார்த்து எனக்கு புது சக்தி பிறக்கிறது-அன்னா
டெல்லி: தேசியக் கொடிகளுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்களைப் பார்க்கும்போது எனக்குப் புதிய சக்தி பிறக்கிறது. எனது கனவுகள் நனவாகி வருகின்றன. நாட்டின் எதிர்காலம் மிகவும் சுபிட்சமாக இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
டெல்லி திஹார் சிறையில் கடந்த 2 நாட்களை செலவிட்ட அன்னா ஹஸாரே, கிரண் பேடியிடம் பேசிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டது. அதில் அவர் பேசியுள்ளதாவது:
ஜன் லோக்பால் மசோதா வரும் வரை எனது போராட்டத்தை நான் விடப் போவதில்லை. எனது உடல் நன்றாகவே உள்ளது. என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்.
எனக்கு சோர்வு ஏற்படவில்லை. வெறும் காலில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு என்னால் நடக்க முடியும். இன்று நான் இங்கு இருக்கிறேன், நாளை உங்களை வந்து சந்திப்பேன்.
ஊழல் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசு தாக்கல் செய்துள்ள பலவீனமான லோக்பால் மசோதாவை அரசு கைவிட வேண்டும்.
இந்த நாட்டின் இளைஞர்கள் விழித்தெழுந்தால் எதிர்காலம் மாறும் என்று நான் தொடர்ந்து கூறிவருகிறேன். இப்போது அந்தக் கனவு நனவாகி வருவதைப் பார்க்கிறேன். மூ்வண்ணக் கொடியை தங்களின் தோள்களில் சுமந்தபடி அவர்கள் போராடுவதையும், கோஷமிடுவதையும் பார்க்கும்போது எனக்குப் புதிய சக்தி பிறக்கிறது.
நாளை உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டும். நான் மிகுந்த நலத்துடன் இருக்கிறேன்.
15 நாட்கள் மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். இந்த 15 நாட்களில் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை. 15 நாட்களுக்குப் பிறகு கால நீட்டிப்பு கேட்பேன் என்றார் ஹஸாரே.












Click it and Unblock the Notifications