Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டு மக்கள் பணத்தை வீணடிக்கும் அதிமுக அரசு: கருணாநிதி அறிக்கை

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: புதிய தலைமைச் செயலகம் சரியாகக் கட்டப்படவில்லை, இடம் போதாது, தரம் சரியில்லை என்றெல்லாம் கூறி அங்கே தலைமைச் செயலகம் அமைவது சரியல்ல என்று சொன்னவர்கள், அந்தக் கட்டிடத்தில் புதிய மருத்துவமனை அமைத்தால், அப்போது அந்தக் கட்டிடத்தின் தரம் சரியாகிவிடுமா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி :- புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றும், அதில் எனக்கு அதிருப்தி இல்லையென்றும் நீங்கள் பேசியதாக சில நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கின்றனவே?

பதில் :- பேச்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் வெட்டி விட்டு அரை குறையாக வெளியிட்ட கருத்துகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

கேள்வி :- புதிய தலைமைச் செயலக இடத்தில் மருத்துவமனை அமைக்கப் போவதாக ஜெயலலிதா அறிவித்ததைப் பாராட்டிப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஏ. சவுந்தரராஜன், புதிய தலைமைச் செயலகம் கோபாலபுரம் பணத்தில் கட்டப்படவில்லை என்று சொல்லியிருக்கிறாரே?

பதில் :- புதிய தலைமைச் செயலகம் கோபாலபுரம் பணத்தில் கட்டப்பட்டதாக நான் எங்கும், எப்போதும் சொல்லவில்லை. அங்கே கட்டப்போகும் மருத்துவமனைக்கான செலவுத் தொகை 200 கோடி ரூபாயைத்தான் சவுந்தரராசன் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப் போகிறார். கோபாலபுரத்தில் உள்ள எனது வீட்டையே பதிவாளர் முன்னிலையில் நான் மருத்துவமனைக்காக அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன்.

பிரதமரைக் கொண்டு திறப்பு விழாவெல்லாம் நிகழ்த்திய தலைமைச் செயலகத்திற்கான அந்தக் கட்டிடத்தினை மாற்றி மருத்துவமனை அமைக்கப் போகிறேன் என்றால் அதற்கு மேலும் எவ்வளவு செலவாகும்? தற்போது செலவழிக்கப்பட்ட நிதியும் வீணாகும் அல்லவா? மருத்துவமனையிலே அறுவை சிகிச்சை அறைகள் எல்லாம் அமைக்கப்பட வேண்டுமென்றால் அதற்குத் தக்கவாறு தொடக்கத்திலிருந்தே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மின்சார தொடர்புகளை மீண்டும் ஆரம்பித்திலிருந்து அடியோடு மாற்ற வேண்டும். ஏட்டிக்குப் போட்டி என்ற வகையில், பிடித்த பிடிவாதத்திலிருந்து இறங்கக் கூடாது என்ற தன்மையில் மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உடந்தையாக இருக்க முயற்சிக்கலாமா? கட்சிக் கொள்கைகளையே புறக்கணித்து விட்டு இவ்வாறு ஆளுங்கட்சிக்கு துணைபோக முயலுவதாலும், அதிக அளவில் பாராட்டுவதாலும் தான் அவர்களுடைய கட்சிக்குழு கூட்டத்திலேயே அதனைக் கண்டித்ததாக ஒரு இதழிலே விரிவாக செய்தி வந்தது.

கேள்வி :- சென்னை பொது மருத்துவமனைக்கு அருகில் இருந்த மத்திய சிறைச்சாலை புழல் பகுதிக்கு மாற்றப்பட்ட பிறகு, மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் பொது மருத்துவமனையின் விரிவாக்கமும் மருத்துவக் கல்லூரிக் கட்டிடமும் அமைக்கப்படும் என்று ஏற்கனவே நீங்கள் அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்ட பிறகு, தற்போது புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை மருத்துவமனையாகவும், பிளாக் பி கட்டிடத்தில் புதிய மருத்துவக் கல்லூரியும் அமைக்கப் போவதாக ஜெயலலிதா அறிவிப்பு செய்திருக்கிறாரே?

பதில்:-அதைத்தான் நான் மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் துக்ளக் தர்பார் என்று சொன்னேன். அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காரணத்தால் அவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அதிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட எதையும் மாற்ற வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

அதனால் மக்கள் பணம் தான் விரயமாகுமே தவிர, திமு கழகத்திற்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற மக்கள் எத்தகைய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது, புதிய ஆட்சியினர் எப்படியெல்லாம் பழிவாங்கும் போக்கில் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதிய தலைமைச் செயலகம் சரியாகக் கட்டப்படவில்லை, இடம் போதாது, தரம் சரியில்லை என்றெல்லாம் கூறி அங்கே தலைமைச் செயலகம் அமைவது சரியல்ல என்று சொன்னவர்கள், அந்தக் கட்டிடத்தில் புதிய மருத்துவமனை அமைத்தால், அப்போது அந்தக் கட்டிடத்தின் தரம் சரியாகிவிடுமா? மருத்துவமனையை அங்கே நடத்தலாம், தலைமைச் செயலகத்தை நடத்த முடியாது என்றால் அது வேண்டுமென்றே காழ்ப்புணர்வோடு நடத்தப்படும் செயல் தானே?

கேள்வி :- அதிமுக அரசு, கழக அரசு காலத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் சட்டம் 2006-ஐ விவாதமின்றியே பேரவையில் ரத்து செய்திருக்கிறதே என்ன காரணம்?

பதில் :- எந்தக் காரணமும் இல்லை, திமுக அரசு கொண்டு வந்தது என்ற ஒன்று தான் காரணம்! விவசாயிகளின் உதவிக்கு வழிவகுக்கக் கூடிய ஒரு சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றலாமா என்றுதான் அதிமுக அரசினர் வந்ததும் வராததுமாக அந்தச்சட்டத்தை ரத்து செய்திருக்கிறார்கள்.

அதிமுக அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியே கூட இதனை ஏற்காமல், இந்தச் சட்டத்தை ரத்து செய்வது சரியல்ல என்றும், சமச்சீர் கல்வியில் செய்த தவறைப் போலவே இந்தச் சட்டத்தை ரத்து செய்வதிலும் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அவர்களுடைய கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+