தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று இளைஞர்களே இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டனர்- திமுக

ராஜ்யசபாவில் இன்று பெரும் இழுபறிக்குப் பின்னர் அரை மனதாக இலங்கைப் பிரச்சினை குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்டு பாஜக, அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் பேசினர்.
திருச்சி சிவா பேசுகையில், தமிழர்கள் தனி நாடு கேட்டார்கள் என்பதற்காக அவர்களைக் கொல்லவில்லை இலங்கை. மாறாக அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்தனர். கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழர்கள் மீது துவேஷம் காரணமாக, தமிழ் நூல் நிலையத்தை தீவைத்து எரித்தனர். பெண்கள் மொத்தமாக மானபங்கப்படுத்தப்பட்டனர். தமிழ் இளைஞர்களே இல்லாத நிலையை இலங்கை அரசு உருவாக்கி விட்டது.
உள்நாட்டுப் போர் என்ற பெயரில் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை இனவெறி ஆட்சி.
இலங்கைக்கு ரூ. 500 கோடி நிவாரண நிதியை அளித்தது இந்தியா. அந்த நிதி எப்படி செலவழிக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி ஆய்வு நடத்த வேண்டும்.
அமெரிக்கப் பிரஜையாகவும் உள்ள கோத்தபயா ராஜபக்சேவை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க வேண்டும். அதேபோல முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் விசாரிக்க வேண்டும் என்றார் சிவா.
மதிமுக கணேச மூர்த்தி
மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி பேசுகையில், பயங்கவாரத்தை அழிக்க நடந்த போர் அல்ல ஈழத்தில் நடந்த போர். அது பயங்கரவாதிகளை அழிப்பது என்ற பெயரில் நடந்த இன அழித்தலாகும். பயங்கரவாதிகள் என்று கூறி தமிழர்களை அழித்து விட்டனர்.
இந்தியாவின் முழு உதவியுடன் இந்த இன அழித்தல் நடந்துள்ளது. பாதுகாப்பான இடங்களில் இருந்தவர்களை தேடித் தேடி அழித்துள்ளனர்.
சிங்களர்களுடன் நேசமாக இருக்க தமிழர்களை அழிக்காதீர்கள் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications