உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டெல்லி: உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு 3 நிபந்தனைகளை விதித்துள்ளார் அன்னா ஹசாரே.

கீழ்மட்ட அரசு அதிகாரிகளை லோக்பால் விசாரணையின் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், ஊழல் செய்யும் அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்-அவர்களது சொத்துக்களை அரசு கையகப்படுத்த வேண்டும், அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும்-அதற்கு லோக்பாலுக்கு உரிய அதே அதிகாரத்தைத் தர வேண்டும்.

இந்த 3 கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, நாளையே நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும். மத்திய அரசு இதைச் செய்தால், நான் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை நாளையே முடித்துக் கொள்ளத் தயார் என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

அதே போல ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றித் தருவதாக பிரதமர் மன்மோகன் சிங் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி் அளிக்க வேண்டும் என்றும் ஹசாரே கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹசாரேவின் கோரிக்கைகளை ஏற்பது தொடர்பாகவும், உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று அன்னா தரப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந் நிலையில் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கோரிக்கை விடுத்தனர்.

சிறைகளை நிரப்புங்கள்-அன்னா அழைப்பு

முன்னதாக லோக்பால் மசோதா குறித்த நேற்றிரவு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. மாறாக, அன்னா ஹஸாரே தனது போராட்டத்தை முதலில் திரும்பப் பெற வேண்டும் என்று மட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டமும், மத்திய அரசும் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துமாறு அன்னா ஹஸாரே அழைப்பு விடுத்தார்.

நேற்று முன்தினம் அரசுத் தரப்பில் கொடுக்கப்பட்டிருந்த சில உத்தரவாதங்கள், உறுதிமொழிகள் நேற்று அரசுத் தரப்பிலிருந்து வாபஸ் பெறப்பட்டு விட்டன. இதனால் அன்னா குழுவினர் கடும் அதிர்ச்சியும், பெரும் ஏமாற்றமும் அடைந்தனர். அரசின் இந்த திடீர் ஜகாவால், இரு தரப்புக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட உறை நிலைக்குப் போய் விட்டது.

மேலும் அன்னாவின் உடல் நிலை குறித்து அரசு அக்கறையுடன் இல்லை என்றும் அவர்கள் ஆவேசத்துடன் கூறுகின்றனர். அதே நேரத்தில் அன்னா குழுவினரின் கோரிக்கையை ஏற்று அவசரம் அவசரமாக லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது ராம்தேவை வலுக்கட்டாயமாக ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற்றது போல அன்னா ஹஸாரேவையும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பது குறித்த வாய்ப்புகளை அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் ராம்லீலா மைதானத்தில் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எந்த காரணத்தைக் கொண்டும் அன்னாவின் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது, வன்முறையில் இறங்கக் கூடாது, அமைதி காக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே நேற்று இரவு 11.30 மணியளவில் அன்னா ஹஸாரே பேசினார். அப்போது, அனைவரும் அமைதியுடன் இருக்க வேண்டும். யாரும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. என்னை அரசு கைது செய்ய விரும்பினால் தாராளமாக செய்யட்டும். அதை நான் தடுக்க மாட்டேன். ஆனால் அதற்காக யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அது நமது இயக்கத்தின் நோக்கத்தை சீர்குலைத்து விடும். மாறாக அனைவரும் கைதாகி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துங்கள். அமைதியான முறையில் போராட்டம் நடத்துங்கள். அரசுத் தலைவர்கள், எம்.பிக்கள் வீடுகளை முற்றுகையிட்டு கைதாகி சிறைகளை நிரப்புங்கள் என்றார்.

முன்னதாக அன்னா குழுவினர் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சல்மான் குர்ஷித் ஆகியோரை சந்தித்துப் பேசினர். பின்னர் வெளியே வந்த அன்னாவின் குழுவினர் கூறுகையில், எங்கு கிளம்பினோமோ அங்கேயே மறுபடியும் வந்து நிற்கிறோம். எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது அன்னாவின் நிலை மோசமாகி வருகிறது. அவருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அரசுதான் பொறுப்பு என்றனர்.

ஆனால் அன்னாவின் உடல் நிலை குறித்து அரசு கவலைப்பட முடியாது என்றும், அதுகுறித்து அன்னா குழுவினர்தான் கவலைப்பட வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எதில் பிரச்சினை?

கீழ்மட்ட அரசு அதிகாரிகள்

லோக்பால் வரம்புக்குள் கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும் என்பது அன்னா ஹஸாரே குழுவின் முக்கிய கோரிக்கையாகும். கீழ் மட்ட அதிகாரிகள்தான் மக்களுடன் தினசரி நேரடித் தொடர்பில் இருப்பவர்கள். எனவே அவர்களை கட்டுப்படுத்த வேண்டியது, கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பது அன்னா குழுவின் வாதமாகும். ஆனால் கிட்டத்தட்ட 40 லட்சம் ஊழியர்களை கண்காணிப்பது என்பது மிகவும் கடினம் என்கிறது அரசு.

மக்கள் சேவை

புதிய ரேஷன் கார்டுகளை 3 நாட்களில் தர வேண்டும், பாஸ்போர்ட்களை 15 நாட்களில் தர வேண்டும் என்பது உள்ளிட்ட மக்களின் முக்கிய சேவைப் பிரிவுகளை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர அன்னா குழு கூறுகிறது. ஆனால் அரசு அதற்கு மறுக்கிறது.

இந் நிலையில் தான் இன்று மத்திய அரசுக்கு 3 நிபந்தனைகளை விதித்துள்ளார் அன்னா. அதே போல செப்டம்பர் 3ம் தேதிக்குப் பிறகும் உண்ணாவிரதத்தைத் தொடர போலீசார் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள அன்னா, ஜன் லோக்பால் விஷயத்தில் பாஜகவின் அமைதியையும் இன்று கண்டித்துப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+